“நானும், அஞ்சலியும் நெருங்கி பழகுவது உண்மைதான்”; நடிகர் ஜெய் பேட்டி


“நானும், அஞ்சலியும் நெருங்கி பழகுவது உண்மைதான்”; நடிகர் ஜெய் பேட்டி
x
தினத்தந்தி 13 Feb 2017 11:15 PM GMT (Updated: 13 Feb 2017 9:01 PM GMT)

“நானும், அஞ்சலியும் நெருங்கி பழகுவது உண்மைதான். திருமணம் எப்போது? என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை” என்று நடிகர் ஜெய் கூறினார்.

சென்னை,

காதல்

நடிகர் ஜெய்யும், நடிகை அஞ்சலியும், ‘எங்கேயும் எப்போதும்’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்கள். இப்போது, ‘பலூன்’ என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் நடித்தபோது, இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக பரவலாக பேசப்பட்டது. இதை இருவருமே மறுக்கவில்லை.

இந்த நிலையில் ஜெய்யும், அஞ்சலியும் ஜோடியாக வெளியில் சுற்றுவதாகவும், இருவருக்கும் இடையே உள்ள நெருக்கம் அதிகரித்த நிலையில், திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பேட்டி

இதுபற்றி நடிகர் ஜெய்யிடம் ‘தினத்தந்தி’ நிருபர் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

“நானும், அஞ்சலியும் நெருங்கி பழகுவது உண்மைதான். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பும், புரிதலும் இருந்து வருகிறது. ‘எங்கேயும் எப்போதும்’ படப்பிடிப்பின்போதே இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம். எனக்கு அஞ்சலியை பிடித்து இருக்கிறது. அஞ்சலிக்கு என்னை பிடித்து இருக்கிறது.

அஞ்சலி, மிக மென்மையானவர். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் அவர் என்னை அடிக்கடி அடித்துக்கொண்டே இருப்பார். நிஜ வாழ்க்கையில் அவர் அதற்கு நேர்மாறான சுபாவம் கொண்டவர். அந்த மென்மையான சுபாவம்தான் என்னை கவர்ந்தது. அவர் எப்போதாவது வருத்தமாகவோ கோபமாகவோ இருந்தால், தமாஷ் செய்து அவரை நான் சிரிக்க வைத்து விடுவேன். அஞ்சலிக்கு என்னிடம் பிடித்ததே இதுதான்.

சமையல்

நாங்கள் நல்ல நண்பர்கள் ஆனபின், அஞ்சலி எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து போய்க் கொண்டிருக்கிறார். அஞ்சலியின் குணம் எங்க அப்பாவுக்கு பிடித்து இருக்கிறது. அஞ்சலிக்கு நன்றாக சமைக்க வரும். ஐதராபாத் நெய் சோறும், சிக்கன் மசாலாவும் அவருடைய ‘ஸ்பெஷல்.’ அப்பாவுக்கு ருசியாக சமைத்து கொடுக்கிறார்.

எனக்கு மூன்று அக்காள் இருக்கிறார்கள். அவர்களின் நெருங்கிய சினேகிதி ஆகி விட்டார், அஞ்சலி. நாங்கள் இருவரும் நெருங்கி பழகுவது அக்கா மூன்று பேருக்கும் தெரியும்.

காதலர் தின வாழ்த்து

இன்று (செவ்வாய்க்கிழமை) காதலர் தினத்தையொட்டி, அஞ்சலிக்கு வாழ்த்து சொல்ல இருக்கிறேன். நான் சென்னையிலும், அஞ்சலி ஐதராபாத்திலும் இருக்கிறோம். அஞ்சலி சென்னையில் இருந்தால் அவருக்கு வாழ்த்து சொல்வதுடன், அவரை கவர்கிற மாதிரி ஒரு பரிசும் கொடுத்து இருப்பேன்.

எங்கள் திருமணம் எப்போது? என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. என்னை விட வயதில் மூத்தவர்களான சிம்பு, ஆர்யா, விஷால் ஆகிய மூன்று பேரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர்கள் மூன்று பேருக்கும் திருமணம் முடிவானதும், எங்கள் திருமணம் நிச்சயிக்கப்படும்.”  இவ்வாறு ஜெய் கூறினார்.

Next Story