அரசியல்வாதிகள் சுயலாபத்துக்காக ரஜினிகாந்தை, இலங்கைக்கு வரவிடாமல் தடுத்து விட்டனர்”


அரசியல்வாதிகள் சுயலாபத்துக்காக ரஜினிகாந்தை, இலங்கைக்கு வரவிடாமல் தடுத்து விட்டனர்”
x
தினத்தந்தி 27 March 2017 9:45 PM GMT (Updated: 27 March 2017 6:07 PM GMT)

அரசியல்வாதிகள் சுயலாபத்துக்காக ரஜினிகாந்தை இலங்கைக்கு வரவிடாமல் தடுத்து விட்டனர் என்று லைக்கா நிறுவனம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

சென்னை,

லைக்கா நிறுவனத்தின் துணைத்தலைவர் பிரேம் சிவசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

150 வீடுகள்

“இலங்கையின் வடக்கு மாகாணத்தின் வவுனியா பிரதேசத்தின் சின்ன அடம்பன் கிராமம் மற்றும் புளியங்குளம் பகுதியில், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் சார்பில், அனைத்து வசதிகளையும் கொண்ட 150 வீடுகள் கட்டப்பட்டது. அகதி முகாம்களில் வாழ்ந்த 150 குடும்பங்களுக்கு இந்த வீடுகளை கையளிக்கும் வைபவம், நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொள்ளுமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்திருந்தோம். அவரும் விருப்பம் தெரிவித்திருந்தார்.

வருகிற 9-ந் தேதி யாழ்ப்பாணத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட வீடுகளுக்கான உறுதிப் பத்திரங்களை ரஜினிகாந்த் வழங்கவும் பாதிக்கப்பட்ட மக்களை அவர் சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. ரஜினிகாந்த் இரண்டு நாட்கள் வடக்கு கிழக்கில் தங்கியிருக்கவும் விருப்பம் கொண்டிருந்தார். முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் திருகோணமலை, மட்டக்களப்பு பிரதேசங்களுக்கு நேரில் சென்று மக்களை சந்திக்கவும், ஆவலாக இருந்தார்.

விழா ரத்து

ஆனால் அவரின் இலங்கைப் பயணம் குறித்து, தற்போது சர்ச்சைகள் எழுந்துள்ளது. ஒரு அறக்கட்டளையின் உதவித்திட்ட செயற்பாடுகளை, தமது அரசியல் சுயலாபத்திற்காக பயன்படுத்துகின்ற ஒரு அநாகரீக சூழல் உருவாகியிருக்கிறது. ரஜினிகாந்தை தர்மசங்கடமான நிலைக்கு உட்படுத்தும் நிலை வலிந்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அசவுகரியங்களை தவிர்க்கும் முகமாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித் திட்டங்கள், இவற்றின் வாயிலாக தடைபடக்கூடாது என்பதற்காகவும், 9-ந்தேதி யாழ்ப்பாணத்தில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்வுகளும் ரத்துச் செய்யப்படுவதோடு ரஜினிகாந்தின் இலங்கை பயணமும் ரத்து செய்யப்படுகிறது என்பதனை மனவேதனையுடன் தெரிவித்து கொள்கிறோம்.

எனினும் திட்டமிட்டபடி பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பினையும், விருப்பத்தினையும், பூர்த்தி செய்யும் நோக்கத்துடன், வருகிற 10-ந்தேதி லைக்கா ஞானம் கிராமம் திறக்கப்பட்டு வீடுகள் அனைத்தும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும்.

வதந்திகள்

இந்த தருணத்தில் உலகவாழ் தமிழ் மக்களுக்கும், தமிழகத்தின் எம் தொப்புள்கொடி உறவுகளுக்கும் சில முக்கிய விஷயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எங்களுக்கும் முந்தைய ராஜபக்சே ஆட்சியாளர்களுக்கும் தொடர்பு இருப்பதாக வதந்திகளையும், புனை கதைகளையும் உருவாக்கியவர்கள் எமது வர்த்தக சாம்ராஜியத்திற்கு எதிரான போட்டியாளர்கள் என்பது உலகறிந்த விஷயம். இப்படியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்பதோடு எந்தவொரு ஆதாரமுற்றவை என்பதனை எமது வாழ்வும், எமது செயற்பாடுகளும் நிரூப்பித்துக்கொண்டு இருக்கின்றன.

ஆரோக்கியமான போட்டிகளை உருவாக்க முடியாதவர்கள் முதுகில் குத்தும் நடவடிக்கைகளை தொடர்கின்றனர். இப்படியான வதந்திகளை பரப்புவதன் மூலமாக தமது குறுகிய லாபத்தை பெற முனைபவர்களுக்கு சார்பாக, சில தமிழக அரசியல்வாதிகள் திரும்ப திரும்ப பேசுவது கண்டிக்கப்பட வேண்டியது. எமது போட்டி வியாபாரிகளிடம் ஏதாவதொரு வகையில் கடமைப்பட்ட காரணத்தினால்தான் இப்படியான ஆதாரமற்ற, உண்மையற்ற வதந்திகளை இவர்கள் முன்வைக்கிறார்கள்.

நன்மை செய்யாத அரசியல்வாதிகள்

இத்தகைய அரசியல்வாதிகள் இன்று எமது தாயகத்தில் அல்லலுறும் தமிழ் மக்களின் வாழ்வுக்கும் அவர்களின் எதிர்கால நன்மைக்கும் எதுவும் செய்ததில்லை. ஆயினும் லைக்கா ஞானம் அறக்கட்டளையின் நோக்கம் அரசியல் தவிர்த்து அவர்களுடைய வாழ்வாதாரத்துக்கும் நிரந்தர உறைவிடத்துக்கும் உதவி செய்வதே ஆகும்.

இதேவேளை ஈழத்தமிழ் மக்களுக்கு நீண்டகால அரசியல் தீர்வை உருவாக்கி கொடுப்பதற்கு பல அரசியல்தலைவர்கள் கடுமையான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதனை நாம் மனதார வரவேற்கிறோம். ஆனால் இன்றைய நிலையில், அனைத்தையும் இழந்து அல்லலுறும் மக்களுக்கு உதவுகின்ற எம்முடைய முயற்சிகளை நிம்மதியாக செய்ய விடுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.”  இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story