50. இசையமைக்க மறுத்த இளையராஜா


50. இசையமைக்க மறுத்த இளையராஜா
x
தினத்தந்தி 24 Jun 2017 12:30 AM GMT (Updated: 23 Jun 2017 10:33 AM GMT)

இயக்குனர் பாக்யராஜூடன், நாங்கள் இணைந்த ‘முந்தானை முடிச்சு’ படத்தின் வெற்றிக்கு, மற்றொரு முக்கிய காரணமாக அமைந்தவர் இசைஞானி இளையராஜா.

யக்குனர் பாக்யராஜூடன், நாங்கள் இணைந்த ‘முந்தானை முடிச்சு’ படத்தின் வெற்றிக்கு, மற்றொரு முக்கிய காரணமாக அமைந்தவர் இசைஞானி இளையராஜா. அவரது இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டன. அதே போல் படத்திற்கு அவர் அமைத்த பின்னணி இசை கூட அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது.

படத்திற்கான ஆரம்பக் கட்ட பணிகளின் போது, ‘இந்தப் படத்திற்கு சங்கர்–கணேஷை இசையமைக்க வைக்கலாம்’ என்று என்னுடைய மூத்த சகோதரர் ஏவி.எம்.குமரன் விருப்பம் தெரிவித்தார். ஆனால் பாக்யராஜ், ‘இல்லை சார்.. இந்தப் படம் பெரிய அளவில் வரப்போகிறது. எனவே இளையராஜா சாரை கேளுங்கள்’ என்று கூறிவிட்டார்.

இதையடுத்து நான், இளையராஜாவுக்கு போன் செய்து, ‘உங்களைப் பார்க்க வேண்டும்’ என்று கூறினேன். அவரும் உடனடியாக என்னுடைய அலுவலகத்திற்கு வந்தார்.

அவரிடம், ‘நாங்கள் பாக்யராஜை வைத்து ஒரு படம் பண்ணுகிறோம். அந்தப் படத்திற்கு நீங்கள்தான் இசை அமைக்க வேண்டும்’ என்றேன்.

நான் சொன்ன மறுநொடியே என்னை கையெடுத்து கும்பிட்டவர், ‘என்னை விட்டுடுங்க சாமி.. அந்த ஆளுக்கு நான் மியூசிக் போட மாட்டேன். வேறு யாரையாவது வைத்து மியூசிக் போடுங்கள். வேறு எந்த படமாக இருந்தாலும் நான் பண்றேன். இந்தப் படத்திற்கு மட்டும் பண்ண மாட்டேன்’ என்று கூறி மறுத்து விட்டார்.

ஏற்கனவே வேறு ஒரு படத்தில் இளையராஜாவுக்கும், பாக்யராஜூக்கும் இடையே ஏதோ பிரச்சினை ஏற்பட்டிருப்பது பின்னர்தான் எனக்குத் தெரியவந்தது.

மறுநாள் காலையில் பாக்யராஜ் வந்ததும், இளையராஜா என்னிடம் சொன்னதை அவரிடம் கூறினேன்.

அதைக் கேட்ட பாக்யராஜ், உடனடியாக பிரசாத் ஸ்டூடியோ சென்று, இளையராஜா அறையின் வாசலில் போய் நின்றிருக்கிறார். அவரைப் பார்த்ததும் இளையராஜா, அந்த அறையில் இருந்து மேலே உள்ள அறைக்குச் சென்றுவிட்டார். ஆனாலும் கூட மதியம் வரை அறையின் வாசலிலேயே நின்றிருக்கிறார் பாக்யராஜ். மதியம் இளையராஜா அறையை விட்டு வெளியே வந்ததும், அவரிடம், ‘இந்தப் படத்திற்கு நீங்க தான் இசையமைக்க வேண்டும்’ என்று சமரசம் பேசியிருக்கிறார்.

மேற்கொண்டு மறுக்க முடியாத இளையராஜா, மறுநாள் என்னிடம் வந்தார். ‘அவர் என்னை சமாதானப்படுத்தி விட்டார். அதனால் இந்தப் படத்திற்கு நான் இசையமைக்கிறேன்’ என்று கூறினார். சினிமாத் துறையைப் பொறுத்தவரை இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது சகஜமான ஒன்று.

‘முந்தானை முடிச்சு’ படத்திற்குள் இளையராஜா வந்தபிறகு அவரது பணி மெச்சத் தகுந்ததாக இருந்தது. படத்திற்கு மிகச் சிறந்த முறையில் இசை அமைத்துக் கொடுத்தார். இப்போது கூட சிலர், ரீ–ரெக்கார்டிங் பணிக்காக 15 முதல் 20 நாட்கள் வரை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் இளையராஜா தன்னுடைய ரீ–ரெக்கார்டிங் பணியை 4 முதல் 5 நாட்களுக்குள் முடித்துவிடும் திறமைசாலி.

பக்தியில் சிறந்த இளையராஜா பவுர்ணமி நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வார். கடைசி 4 ரீல்களுக்கு ரீ–ரெக்கார்டிங் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் அன்று இரவு இளையராஜா, திருவண்ணாமலை புறப்படுவதாக இருந்தார். மாலை 6 மணிக்கு கொஞ்சம் ஓய்வு எடுத்தபோது, ‘ராஜா! இன்னும் 4 ரீல் இருக்கு. முடிக்க முடியுமா? என்ன பண்ணப் போகிறீர்கள்?’ என்று கேட்டேன்.

எப்போதும் இளையராஜா உள்ளே உட்கார்ந்து ‘மிக்சிங்’ பார்ப்பார். கோவர்தன் வெளியே இருப்பார். அன்று கோவர்தனை ‘மிக்சிங்’ பார்க்கச் சொல்லி குறிப்புகளை கொடுத்து விட்டு, இளையராஜா போய் ரீ–ரெக்கார்டிங் பணியை கண்காணிக்கத் தொடங்கிவிட்டார். கடைசி 4 ரீலும் இரவு 9.15 மணிக்குள் முடிந்துவிட்டது. இடையில் எந்த ஒரு ஓய்வும் எடுக்கவில்லை. முடிக்க வேண்டும் என்பதற்காக ஏனோதானோ என்று முடிக்கவில்லை. மிகப் பிரமாதமாக ரீ–ரெக்கார்டிங் பணியை முடித்துக் கொடுத்திருந்தார். இந்த அளவுக்கு செய்வதற்கு இளையராஜாவை விட்டால், வேறு ஆள் கிடையாது. அதனால்தான் நான் முன்பே சொன்னேன், ‘முந்தானை முடிச்சு’ படத்தின் வெற்றிக்கு பாக்யராஜூக்கு அடுத்தபடியாக பாராட்டத் தகுந்தவர் இளையராஜா தான்.

படத்தில் ஐந்து பாடல்கள்தான். ஆனால் கேசட்டில் ஆறு பாடல்கள் இருக்கும். இளையராஜா டைட்டில் பாடல் பாடினால், படம் நன்றாக ஓடும் என்று ஒரு சென்டிமென்ட் இருந்தது. அதனால் ஒரு பாடலைச் சேர்த்தோம். சமீபத்தில் மறைந்த நா.காமராஜ் ‘விளக்கு வச்ச நேரத்திலே..’ என்ற பாடலை எழுதிக்கொடுக்க, அதனை இளையராஜா பாடினார்.

‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பின் போது பல சுவாரசியமான வி‌ஷயங்களும் நடைபெற்றன. இந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகள் கோபிச்செட்டிப்பாளையம் அருகில் உள்ள ஓலப்பாளையம் என்ற இடத்தில்தான் நடந்தது. அங்கிருந்த பள்ளிக்கூடத்தின் அருகில் பாக்யராஜ் தன் குழந்தையுடன் தங்கியிருப்பதைப் போல் வரும் வீட்டை, புதியதாக கட்டினோம். படப்பிடிப்பு முடிந்ததும் அந்த வீட்டை, பள்ளிக்கூடத்தின் வகுப்பறைகளில் ஒன்றாக பயன்படுத்திக்கொள்ளும்படி கொடுத்துவிட்டோம். இந்தப் படத்தில் வரும் சில கதாபாத்திரங்களுக்கு, பாக்யராஜ் அந்த ஊரில் இருந்தவர்களில் சிலரையே பிடித்து நடிக்க வைத்தார்.



இந்தப் படத்தில்தான் நடிகை கோவை சரளா முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டார். கதாநாயகியாக நடித்த ஊர்வசியும் புதுமுகம்தான். காட்சி கள் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக இயக்குனர் பாக்யராஜ், ஊர்வசியை மிரட்டி, உருட்டி வேலை வாங்கினார். பல டேக்குகளை வாங்கும் போது அந்தக் கோபம் எல்லை மீறவும் செய்திருக்கிறது. அப்படிப்பட்ட பாக்யராஜை, வறுத்தெடுக்கும் வாய்ப்பு ஊர்வசிக்கும் கிடைத்தது.

பொதுவாக பாக்யராஜ், நடிப்பு, சண்டை காட்சிகளில் திறம்பட நடித்து விடுவார். ஆனால் அவருக்கு நடனம் என்றால் ஆகாது. அன்று ‘கண்ணைத் திறக்கணும் சாமி..’ என்ற பாடலுக்கான படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு தொடங்கியது முதலே பாக்யராஜ், படப்படப்புடனேயே காணப்பட்டார். இதைக் கவனித்த ஊர்வசி, ‘என்ன சார்.. என்னாச்சு?’ என்று கேட்டுக்கொண்டே இருந்தார். நடன அமைப்பை சொல்லிக் கொடுத்ததும், நடன அசைவுகளை முதலில் பாக்யராஜ் தவறாகச் செய்ய, ‘என்ன சார்.. என்ன சொல்லிக் கொடுத்தாங்க.. நீங்க என்ன செய்றீங்க?. இப்படி பண்ணுங்க சார்.. அப்படி பண்ணுங்க சார்..’ என்று அந்தப் பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு முடியும் வரை பாக்யராஜை கிண்டல் அடித்து தள்ளிவிட்டார் ஊர்வசி.

இதுபற்றி ஒரு பேட்டியில் பாக்யராஜ் கூறும்போது, ‘நான் இயக்குனராக ஊர்வசியை படுத்தி எடுத்ததை மனதில் வைத்துக் கொண்டு, பாடல் காட்சியின் நடனமாடும் போது, அவர் இயக்குனராக மாறி என்னை படுத்தி எடுத்துவிட்டார்’ என்று நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.

‘முந்தானை முடிச்சு’ படத்தில் வைரமுத்து ஒரு பாடல் கூட எழுதவில்லை. ஆனால் அந்த படத்தின் விளம்பரத்திற்கு அவர் உதவி செய்தார். நட்புக்காக கவிதை வரிகளில் விளம்பரங்களை எழுதித் தந்தார்.

இந்தப் படத்திற்காக முதலில் பாக்யராஜிக்கு ரூ.4 லட்சம் சம்பளம் பேசப்பட்டது. அந்த நேரத்தில் வெளியாகியிருந்த ‘தூறல் நின்னு போச்சு’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. எனவே அவர் தனக்கு ரூ.8 லட்சம் சம்பளமாக வேண்டும் என்று கேட்டார்.

நாங்கள் முதலில் தயங்கினோம். பின்னர் விநியோகஸ்தர்களிடம் பேசியதில், ‘அவரிடம் வி‌ஷயம் இருக்கிறது, கொடுங்கள்’ என்று சொன்னதால், பாக்யராஜ் கேட்ட தொகையைக் கொடுத்தோம்.

‘முந்தானை முடிச்சு’ படத்தின் நீளம் அதிகமாக இருந்தது. ‘நீளத்தை குறைக்க வேண்டும்’ என்று பாக்யராஜ் சொன்னார். நாங்களோ, ‘நீளம் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை. எல்லா காட்சிகளும் சிறப்பாக வந்துள்ளது. குறைக்க வேண்டாம்’ என்றோம். ஆனால் பாக்யராஜ் நீளத்தை குறைத்தால் விறுவிறுப்பாக இருக்கும் என்று கூறி குறைத்தார்.

படம் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வி‌ஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்வார் இயக்குனர் பாக்யராஜ். அதற்காக அவர் எழுதிய வசனத்தை, முடிவு செய்து வைத்திருந்த காட்சி அமைப்பை கடைசி நேரத்தில் கூட மாற்றம் செய்வார். அது ஒரு சிலருக்கு, ‘என்ன இப்படி படுத்தி எடுக்கிறார்’ என்பது போல் இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை சின்னச் சின்ன வி‌ஷயங்களில் கூட இன்னும் சிறப்பாக எப்படிச் செய்யலாம் என்று சிந்திக்கக்கூடிய இயக்குனர், கதாசிரியர் என்றால், அது பாக்யராஜ் தான்.

அடுத்த வாரம்: கமல் படத்தில் இந்தி பட கிளைமாக்ஸ்.

செருப்பை கழட்டாத ஊர்வசி

முதலில் ‘முந்தானை முடிச்சு’ படத்தின் இடைவேளை பகுதியில் வரும் காட்சியை வேறு விதமாக சொல்லியிருந்தார் பாக்யராஜ். அதாவது பாக்யராஜ் தன்னைக் கெடுத்து விட்டதாக ஊர்வசி பஞ்சாயத்தில் சொல்ல, ஊரார் முன்னிலையில் அவர் தன் கையில் தாலியை வாங்குவது போல் இடைவேளையை அமைத்திருந்தார். பிறகு அந்தக் காட்சியில் இன்னும் கொஞ்சம் சென்டிமென்டை ஏற்றலாம் என்பதற்காக மாற்றப்பட்டதுதான், குழந்தையை ஊர்வசி தாண்டுவதுபோல் அமைக்கப்பட்ட காட்சி.

இந்தக் காட்சி எடுத்து முடிக்கப்பட்ட மறு நாள், தெரிந்தோ தெரியாமலோ அந்தக் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் விட்டது. அதற்கு ‘ஊர்வசி, குழந்தையை தாண்டியதுதான் காரணம்’ என்று, யாரோ ஒருவர் குழந்தையின் தாயிடம் சொல்லியிருக்கிறார்கள். மேலும் அந்த நபர், ‘ஊர்வசியின் காலடி மண்ணை எடுத்து குழந்தைக்கு சுற்றிப் போட்டால்தான், குழந்தை உடல்நிலை சரியாகும்’ என்றும் கொளுத்திப் போட்டிருக் கிறார்.

அதே நேரம் ஊர்வசிக்கும், அந்தக் குழந்தையின் தாய் தன்னுடைய காலடி மண்ணை எடுக்கப் போகிறார் என்றும், அப்படி எடுத்து விட்டால் குழந்தைக்கு நோய் சரியாகி விடும். உங்களுக்கு உடல்நிலை பாதிக்கப்படும் என்றும் யாரோ சொல்லியிருக்கிறார்.

இதனால் படப்பிடிப்பு தளத்தில் ஊர்வசி தனது செருப்பை கழற்றவே இல்லை. குழந்தையின் தாய், ஊர்வசி எப்போது செருப்பை கழற்றி விட்டு நடப்பார் என்று ஊர்வசியின் காலைப் பார்ப்பதும், அவர் பார்க்கும் போதெல்லாம் ஒருவித திகிலோடு ஊர்வசி வலம் வந்ததும் எங்களுக்கு, பின்னர்தான் தெரியவந்தது.

Next Story