நடிகை காஜல் அகர்வாலின் மானேஜர் கைது


நடிகை காஜல் அகர்வாலின் மானேஜர் கைது
x
தினத்தந்தி 24 July 2017 11:15 PM GMT (Updated: 24 July 2017 7:53 PM GMT)

தெலுங்கு பட உலகைச் சேர்ந்த நடிகர்–நடிகைகள் மற்றும் கலைஞர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்ததாக ஏற்கனவே 18 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஐதராபாத்,

தெலுங்கு பட உலகைச் சேர்ந்த நடிகர்–நடிகைகள் மற்றும் கலைஞர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்ததாக ஏற்கனவே 18 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கும்பலிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் நடிகர்–நடிகைகள் மற்றும் கலைஞர்களுக்கு தெலுங்கானா மாநில கலால் வரித்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்த போதை பொருள் கும்பலுடன் தொடர்பு வைத்து இருந்ததாக நடிகை காஜல் அகர்வாலின் மானேஜர் புட்கார் ரோன்சன் ஜோசப் என்பவரை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். ஐதராபாத்தின் மணிகொண்டா பகுதியில் உள்ள புட்கார் ரோன்சன் ஜோசப்பின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது அங்கிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும், இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாகவும் வருவாய் புலனாய்வு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புட்கார் ரோன்சன் ஜோசப்பையும் சேர்த்து போதை பொருள் விவகாரத்தில் இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே, விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நடிகை சார்மி ஐதராபாத் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார். அதில், பெண் அதிகாரிகள் மற்றும் தனது வக்கீல்கள் முன்னிலையில்தான் தன்னிடம் விசாரணை நடத்தவேண்டும் என உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டு உள்ளார்.


Next Story