போதைப்பொருள் வழக்கில் மானேஜர் கைது: நடிகை காஜல் அகர்வால் அதிர்ச்சி


போதைப்பொருள் வழக்கில் மானேஜர் கைது: நடிகை காஜல் அகர்வால் அதிர்ச்சி
x
தினத்தந்தி 25 July 2017 11:15 PM GMT (Updated: 25 July 2017 8:13 PM GMT)

போதைப்பொருள் வழக்கில் மானேஜர் கைதானது குறித்து, நடிகை காஜல் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார். ‘சமூகத்தை சீரழிக்கும் செயல்களை ஆதரிக்க மாட்டேன்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐதராபாத்,

நடிகர்–நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினருக்கு போதைப்பொருள்கள் சப்ளை செய்தவர்களை ஐதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர். தெலுங்கு நடிகர்–நடிகைகளுக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகர்–நடிகைகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

நடிகை காஜல் அகர்வாலின் மானேஜரான ரோனி என்ற குட்கர் ரோன்சனுக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். ரோனியையும் கைது செய்தனர்.

இது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மானேஜர் கைதானது குறித்து நடிகை காஜல் அகர்வால் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:–

ரோனி சம்பந்தப்பட்ட வி‌ஷயத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். நான் இந்த செயலை ஆதரிக்கவில்லை. சமூகத்தை சீரழிக்கின்ற எந்த காரியத்துக்கும் ஆதரவு கொடுக்கமாட்டேன். என்னிடம் வேலை பார்ப்பவர்கள் மீது நான் அக்கறை காட்டுவது உண்டு. அதே நேரம் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களுடன், எனக்கு எந்த தொடர்பும் கிடையாது.

எனது சினிமா சம்பந்தப்பட்ட பணிகள் அனைத்தையும் எனது குடும்பத்தினரே கவனிக்கின்றனர். சினிமா துறையில் இருப்பவர்களுடன் தொழில் சம்பந்தமாக மட்டுமே எனக்கு உறவு இருக்கிறது. வேலை முடிந்ததும் சொந்த வாழ்க்கைக்கு போய்விடுகிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள்? எங்கு போகிறார்கள்? என்ன நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்? என்பது எனக்கு தெரியாது.

இவ்வாறு காஜல் அகர்வால் கூறியுள்ளார்.



Next Story