நடிகை பிரியாமணி திருமணம் காதலரை மணக்கிறார்


நடிகை பிரியாமணி திருமணம் காதலரை மணக்கிறார்
x
தினத்தந்தி 6 Aug 2017 10:43 AM GMT (Updated: 6 Aug 2017 10:43 AM GMT)

நடிகை பிரியாமணி திருமணம் பெங்களூருவில், வருகிற 23-ந்தேதி நடக்கிறது. அவர் தனது காதலரை மணக்கிறார்.

சென்னை,

‘கண்களால் கைது செய்’ என்ற படத்தின் மூலம் டைரக்டர் பாரதிராஜாவினால் தமிழ் படஉலகுக்கு கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் பிரியாமணி.

‘அது ஒரு கனாக்காலம், தோட்டா, நினைத்தாலே இனிக்கும், மலைக்கோட்டை’ உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.

டைரக்டர் அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்’ படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

பிரியாமணிக்கும், தொழில் அதிபர் முஸ்தபா ராஜுக்கும் இடையே நீண்டகாலமாக காதல் இருந்து வந்தது. 3 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு பெங்களூருவில் நிச்சயதார்த்தம் நடந்தது.

பிரியாமணி- முஸ்தபா ராஜ் திருமணம் வருகிற 23-ந்தேதி பெங்களூருவில் நடக்கிறது. திருமணத்தை இருவரும் பதிவு செய்துகொள்கிறார்கள். மறுநாள் 24-ந்தேதி மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள். திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இரண்டு பேரின் பெற்றோர்களும் கவனித்து வருகிறார்கள். 

Next Story