உண்மைச் சம்பவத்தால் உச்சம் தொட்ட திரைப்படம்


உண்மைச் சம்பவத்தால் உச்சம் தொட்ட திரைப்படம்
x
தினத்தந்தி 19 Aug 2017 7:24 AM GMT (Updated: 19 Aug 2017 7:24 AM GMT)

‘பிரிஸன் பிரேக்கிங்’... அதாவது சிறையிலிருந்து தப்பித்தலை மையமாக கொண்டு வெளியான திரைப்படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் ஒன்று, ‘தி கிரேட் எஸ்கேப்’.

‘பிரிஸன் பிரேக்கிங்’... அதாவது சிறையிலிருந்து தப்பித்தலை மையமாக கொண்டு வெளியான திரைப்படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் ஒன்று, ‘தி கிரேட் எஸ்கேப்’. 1963-ல் வெளியான அமெரிக்க படமான இது, உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. 1947-ல் ஜெர்மனியில் உள்ள பிரத்யேக சிறையில் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த போர் கைதிகளை கொண்டு வந்து அடைத்தனர். அவர்கள் அனைவரும் பல்வேறு சிறைகளிலிருந்து தப்பிக்க முயன்றவர்கள். தப்பிக்கும் கலையில் கில்லாடிகள். அதன் காரணமாகத்தான் அவர்கள் இந்த பிரத்யேகச் சிறைக்கு மாற்றப்பட்டனர். சிறைக்கு வந்த முதல்நாளே சிலர் தப்பிக்க முயல்கின்றனர். ஆனால் ஜெர்மன் அதிகாரிகள் அதனை எளிதாக கண்டுபிடித்துவிடுகிறார்கள். அதில் இருவர், அவர்கள் செய்த செயலுக்காக தனிமைச் சிறையில் அடைக்கப்படுகின்றனர். அந்தச் சிறைக்கு ‘ரோஜர் பார்ட்லெட்’ என்கிற கைதியும் கொண்டு வரப்படுகிறார். அவர் பல சிறைகளிலிருந்து தப்பிக்கும் நிகழ்வுகளுக்கு தலைவராக இருந்தவர். இன்னொரு முறை தப்பிக்க முயன்றால் கொலை செய்யப்படுவாய் என்ற மிரட்டலுடன் சிறையில் அடைக்கப்படுகிறார்.

கைதிகள் அனைவரும் ராணுவ அதிகாரிகள் என்பதால், பெரிய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. வீட்டு சிறை போன்றே வைக்கப்பட்டிருக்கின்றனர். பார்ட்லெட் வந்த அன்றே கைதிகள் ஒன்று கூடுகின்றனர். ஒரே நேரத்தில் டாம், டிக், ஹாரி என்று மூன்று சுரங்கங்களை தோண்டுவது என்று முடிவாகிறது. அதிகாரிகள் ஒரு சுரங்கத்தை கண்டுபிடித்தாலும் இன்னொன்றின் வழியாக தப்பிக்க முடியும் என்பதே அவர்களது திட்டம். இதற்காக 16 முறை சுரங்கம் தோண்டிய அனுபவசாலியான டேனி என்ற கைதி முதல் சுரங்கத்தை தோண்ட ஆரம்பிக்கிறான். சுரங்கம் தோண்டுவது எளிதான விஷயமில்லை. அதில் பல நடைமுறை சிக்கல்கள் உண்டு.

சுரங்கம் தோண்டும் போது சத்தம் வரக்கூடாது. அப்படியே வந்தாலும் அதிகாரிகளுக்கு கேட்கக் கூடாது. தோண்டிய மண்ணை அதிகாரிகளுக்கு தெரியாமல் அப் புறப்படுத்த வேண்டும். அவர்கள் அடைப்பட்டிருப்பது ஜெர்மனி. ஆகவே தப்பித்தால் மட்டும் போதாது. ஜெர்மனியிலிருந்து வெளியேற ரெயில் டிக்கெட், அடையாள அட்டை, சாதாரண உடைகள், பாஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்தையும் தயார் செய்ய வேண்டும். இதுபோன்ற சவால்களை அவர்கள் எவ்வாறு எதிர்கொண்டு சமாளிக்கிறார்கள் என்பது சுவாரசியமாக படத்தில் சொல்லப்பட்டிருந்தது. 250 பேர் தப்பிக்க போட்ட திட்டத்தில் 76 பேரால் மட்டுமே தப்பிக்க முடிகிறது. அதிலும் 50 பேர் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். 23 பேர் மறுபடியும் சிறைக்கு திரும்ப, 3 பேர் மட்டும் எப்படியோ தப்பித்துவிடுகின்றனர். அது எப்படி நடந்தது என்ற கேள்விகளுக்கான விடை, படத்தை சுவாரசியமாக்குகிறது.

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், வணிக வெற்றிக்காக, தப்பித்தல் காட்சிகளை கொஞ்சம் சாகசத்துடன் எடுத்திருப்பார்கள். இன்றும் ‘பிரிஸன் பிரேக்கிங்’ படங்களில் இந்தப் படம் ஒரு மைல் கல்லாக விளங்குகிறது. அதனால் தான் ‘தி கிரேட் எஸ்கேப்’ திரைப்படம் இணையதளங்களில் பட்டையை கிளப்புகிறது.

Next Story