சினிமா தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் ‘பெப்சி’ தலைவர் ஆர்.கே.செல்வமணி பேட்டி


சினிமா தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் ‘பெப்சி’ தலைவர் ஆர்.கே.செல்வமணி பேட்டி
x
தினத்தந்தி 13 Sep 2017 11:45 PM GMT (Updated: 13 Sep 2017 10:21 PM GMT)

சினிமா தொழிலாளர்கள் ‘ஸ்டிரைக்’ வாபஸ் பெறப்படுவதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்தார்.

சென்னை, 

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“சினிமா தயாரிப்பாளர்களுக்கும், பெப்சிக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டதால் திரைப்படத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தயாரிப்பாளர்கள் சங்கமும், பெப்சியும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன.

போராட்டம் வாபஸ்

இந்த பேச்சுவார்த்தை சுமுகமாகவும், வெற்றிகரமாகவும் நடந்து இரு தரப்பினருக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து பெப்சி வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ரஜினிகாந்த் நடிக்கும் காலா உள்ளிட்ட அனைத்து படப்பிடிப்புகளும் இன்று (நேற்று) முதல் தொடர்ந்து நடைபெறும்.

திரைப்பட தொழிலாளர்கள் அனைவரும் படப்பிடிப்புகளில் வழக்கம்போல் கலந்து கொள்வார்கள். பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைத்த விஷால் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கும், பெப்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

உடன்பாடு

தொழிலாளர்களுக்கு வேலைக்கு சம்பளம் கொடுப்போம். ஆனால் அவர்கள் வாகனங்களில் படப்பிடிப்பு தளத்துக்கு வரும் பயண நேரத்துக்கு சம்பளம் கொடுக்க முடியாது என்று தயாரிப்பாளர்கள் கூறியதுதான் பிரச்சினை ஏற்படுவதற்கு முதல் காரணமாக இருந்தது. தற்போது பயணம் செய்யும்போது பாதி சம்பளம் கொடுக்க வேண்டும் என்று உடன்பாடு ஏற்பட்டு உள்ளது.

தயாரிப்பாளர்களும் பெப்சி தொழிலாளர்களும் இணைந்து பணியாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளதால் வெளியாட்கள் வேலைக்கு தேர்வு செய்யப்படமாட்டார்கள். பெப்சியில் 22 சங்கங்கள் உள்ளன. சிறு பட தயாரிப்பாளர்கள், தங்களுக்கு மேக்கப் மேன், ஆடை வடிவமைப்பாளர்கள் தேவை இல்லை என்று கருதினால், அவர்கள் இல்லாமலேயே படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார். 

Next Story