27–ந்தேதி ‘2.0’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா: நடிகர் ரஜினிகாந்த் துபாய் பயணம்; 10 ஆயிரம் ரசிகர்கள் கலந்து கொள்கிறார்கள்
‘2.0’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் துபாய் புறப்பட்டு செல்கிறார். இந்த விழாவில் 10 ஆயிரம் ரசிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
சென்னை,
இந்த படத்தை ரூ.400 கோடி செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ் திரையுலக வரலாற்றில் அதிக பட்ஜெட்டில் உருவாகி உள்ள படம் இது. 2015–ல் படப்பிடிப்பு தொடங்கி இரண்டு வருடங்களாக நடந்துள்ளது. வெளிநாடுகளில் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டன. சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் பல கோடி செலவில் அரங்குகள் அமைத்தும் படப்பிடிப்புகள் நடந்து முடிந்துள்ளன.
3டி தொழில்நுட்பத்தில் 2.0 தயாராகி உள்ளது. சமீபத்தில் 3டியில் தயாரான வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. பாகுபலி படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் பேசப்பட்டன. அதையும் மிஞ்சும் விதமாக 2.0 வில் மிரட்டலான கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகின்றன.இந்த பணிகளில் ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆங்கிலம் உள்பட 15 மொழிகளில் இந்த படத்தை வருகிற ஜனவரி மாதம் 25–ந்தேதி திரைக்கு கொண்டு வருகிறார்கள். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக 2.0 படம் இருக்கும் என்று பேச்சு உள்ளது.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை துபாயில் வருகிற 27–ந்தேதி பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. இதற்கான விழாவுக்கு ரூ.12 கோடி செலவிடப்படுகிறது. விழா மேடையில் ஏ.ஆர்.ரகுமான் இசை கச்சேரி நடக்கிறது. இந்த விழாவில் 10 ஆயிரம் ரசிகர்கள் பங்கேற்கிறார்கள்.துபாய் மால்களில் ஒன்றரை லட்சம்பேர் டெலிவிஷன்களில் நேரடியாக பாடல் வெளியீட்டை காணவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. 6 பேர் அமரும் மேஜைக்கு ரூ.3.7 லட்சமும் 8 பேர் அமரும் மேஜைக்கு ரூ.4.6 லட்சமும் 12 பேர் அமரும் மேஜைக்கு ரூ.6.8 லட்சமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த் நாளை (புதன்கிழமை) இரவு விமானத்தில் துபாய் புறப்பட்டு செல்கிறார். அக்ஷய்குமார், எமிஜாக்சன் ஆகியோரும் துபாய் செல்கின்றனர். விழாவை முடித்து விட்டு 28–ந்தேதி ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார்.