சுத்தமும்.. சுகமும்.. - நடிகை ஷில்பா ஷெட்டி


சுத்தமும்.. சுகமும்.. - நடிகை ஷில்பா ஷெட்டி
x
தினத்தந்தி 19 Nov 2017 6:08 AM GMT (Updated: 19 Nov 2017 6:08 AM GMT)

நடிகை ஷில்பா ஷெட்டி இந்தி திரை உலகில் பெரும்புகழ் பெற்றவர். தற்போது சொந்த வாழ்க்கையிலும், யோகாவிலும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

டிகை ஷில்பா ஷெட்டி இந்தி திரை உலகில் பெரும்புகழ் பெற்றவர். தற்போது சொந்த வாழ்க்கையிலும், யோகாவிலும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். வெற்றிகரமான பெண் மணியாகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார். இன்றைய தனது வாழ்க்கையை பற்றி அவர் கூறும் தகவல்கள்!

யோகா:

யோகா எல்லோருக்கும் பொருந்தும் கலை. அனைத்து மக்களும் ஆரோக்கியமாக வாழ யோகா அவசியம். அது ஒரு இயற்கை மருந்து. செலவில்லாமல் நினைத்த இடத்தில் யோகா செய்து உடலை வளப்படுத்திக்கொள்ளலாம். நாம் சொல்வது நல்ல விஷயமாக இருந்தாலும் அது மக்கள் மனதில் பதியவேண்டும். அப்போதுதான் முழுமையான பலன் கிடைக்கும். யோகா பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பது ஆரோக்கியமான விஷயம்.

நான் யோகா செய்கிறேன். பயிற்றுவிக்கிறேன். யோகா மாடலாகவும் இருக்கிறேன். இதனால் எனக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. ஒரு நன்மையை நாம் பிறருக்கு செய்ய முற்படும்போது அந்த நன்மையை நாமும் அனுபவிப்போம். நான் தினமும் யோகா செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன். நான் கொஞ்சமும் உடல் அழகோ, ஆரோக்கியமோ கெட அனுமதிப்பதில்லை. யோகா மாடலாக இருக்கும் நான் மற்றவர்களுக்கு அதில் முன்னுதாரணமாக இருந்தாகவேண்டும். நானே ஆரோக்கியம் இல்லாமலும், அழகு இல்லாமலும் இருந்துகொண்டு மற்றவர்களிடம் அவைகளை பற்றிப் பேசினால், அது யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டதாக ஆகிவிடும். சிலர் தனக்கு வேலை அதிகமாக இருக்கிறது. அதனால் யோகா செய்ய நேரமில்லை என்கிறார்கள். சாப்பிடுகிறோம், தூங்குகிறோம் அதற்கெல்லாம் நேரத்தை ஒதுக்கிக்கொள்வது போல் யோகாவிற்கும் நேரத்தை ஒதுக்கவேண்டும்.

தூய்மை இந்தியா:

பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் சிறப்பானது. நாம் ஒவ்வொருவருக்கும் தூய்மையை பற்றிய விழிப்புணர்வு அவசியம். மற்ற நாடுகள் தூய்மையாக இருப்பதாக பெருமை பேசி பலனில்லை. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் தூய்மையான இந்தியா என்ற கனவு நனவாகும். அப்படிப்பட்ட பணியில் எனக்கும் ஒரு பங்கு இருப்பதை நினைத்து மகிழ்கிறேன். என்னுடைய புகழ் இந்திய சுத்தத்திற்கு பயன்படட்டும்.

புதிய ஒளி உலகம்:

நான் புதிய ஒளி உலகமாக ‘யூடியூப் சேனல்’ ஒன்றை தொடங்கியிருக்கிறேன். அதில் என் மனதில் தோன்றும் நல்ல விஷயங்களை எல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறேன். மக்களின் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் இரண்டுக்கும் அது உதவும். யோகாவின் முக்கியத்துவம் - உடற்பயிற்சியின் தேவை - சரியான உணவுப் பழக்கம் போன்றவைகள் பற்றி குறிப்பிடுகிறேன். மக்கள் அதனை விரும்பிப் பார்க்கிறார்கள்.

குடும்ப வாழ்க்கை:

குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை ஆகிய இரண்டுக்கும் என்னால் முக்கியத்துவம் கொடுக்க முடிகிறது. எனது குழந்தை எனக்கு முக்கியம். மகள் வியானை நான் தனியாகவிட முடியாது. அவளை மனதில்வைத்துக்கொண்டுதான் எனது அனைத்து வேலைகளையும் திட்டமிடுகிறேன். என்னால் ஒருபோதும் சும்மா இருக்க முடியாது. அதனால் எல்லா நேரமும் என்னை பிசியாக வைத்துக்கொள்வேன். பெண்கள் தங்கள் அறிவு, அனுபவம் இரண்டையும் குடும்பத்தை நன்றாக நடத்துவதற்கு பயன்படுத்தவேண்டும். சரியான பாதையில் செல்வது முதலில் சில நாட்கள் சிரமமாக இருந்தாலும் பின்பு பழகிவிடும்.

வாழ்க்கையில் மாற்றம்:

என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நானும் நிறைய மாறி இருக்கிறேன். முன்பு போல் அதிகம் யாரிடமும் கோபம்கொள்ள மாட்டேன். எல்லோரையும் எளிதாக மன்னித்துவிடும் சுபாவம் உருவாகியிருக்கிறது. இதெல்லாம் யோகா மூலம்தான் எனக்கு வந்தது. அது என் உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் வலிமையாக்கியிருக்கிறது. அது கர்வத்தை அழித்துவிட்டது. கர்வத்தை அழித்தால் மனதில் வெற்றிடம் உருவாகும். அந்த வெற்றிடத்தை மகிழ்ச்சி நிறைத்துவிடும். இது யோகாவின் மகிமை.

பணியில் மனநிறைவு:

நான் நடித்துக்கொண்டிருந்த காலத்தில் திரை உலகினர் என்னை மதித்தார்கள். என் நடிப்பையும், நட னத்தையும் ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். அதனை டெலிவிஷன் வழியாக இன்றும் நிறைய ரசிகர்கள் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். எனக்கு கிடைத்த வாய்ப்புகள் இப்போதைய நடிகைகளுக்கு கிடைக்கவில்லை. சினிமாவில் நிலைத்து நின்று புகழ்பெறுவது பெரிய விஷயம். அந்த புகழ் எனக்கு கிடைத்திருப்பதால் நான் என் பணியில் மனநிறைவடைகிறேன்.

இன்றைய சினிமா:

இன்றைய சினிமா ரொம்பவும் மாறியிருக்கிறது. அதிக லாபம் சம்பாதிக்க என்ன வழி என்ற எண்ணத்தோடுதான் புதிய சினிமாக்களை உருவாக்குகிறார்கள். அதனால் சினிமாவில் சொல்லவேண்டிய பல விஷயங்கள் அடிபட்டுபோய்விடுகிறது. புதிதாக படம் எடுக்கிறவர்களும் தங்களுக்கு எல்லாம் தெரிந்ததாக நினைத்துக்கொள்கிறார்கள். பெண்களை மையமாக வைத்து அதிக படங்கள் தயாராவதும், நவீன தொழில்நுட்பங்களை கையாளுவதும் வரவேற்கத் தகுந்தது.

உறவுகள்:

இப்பொழுதெல்லாம் உறவுகள் சீக்கிரமாக முடிவுக்கு வந்துவிடுகின்றன. உண்மையான நம்பிக்கையும், அன்பும் உறவுகள் மீது இல்லாமல் இருப்பதே அதற்கான காரணம். அனைவரையும் அன்போடு அணுகவேண்டும். உண்மையான அன்பும், நேசமும்தான் உறவுகளை வளர்க்கும். பெண்கள் குடும்ப வாழ்க்கையில் இணையும்போது தங்களை அறிவாளிகள் போன்று காட்டிக்கொள்ளக்கூடாது. கர்வத்தை கைவிடவேண்டும். பணிந்துபோவது தோல்வி அல்ல. அதில்தான் வாழ்க்கையின் வெற்றி அடங்கியிருக்கிறது. பொது வாழ்க்கையில் கணவர் எனக்கு ஆதரவாக இருப்பது எனது பலம். அவர் அவ்வப்போது எனக்கு தேவையான ஆலோசனைகளை தந்துகொண்டிருக்கிறார். அவர் எனது வழிகாட்டி. கூடவே எனது ரசிகர். 

Next Story