விமானத்தில் பாலியல் தொல்லை: ‘சாயிரா வாசிம் இடத்தில் நான் இருந்திருந்தால், காலை உடைத்திருப்பேன்’


விமானத்தில் பாலியல் தொல்லை: ‘சாயிரா வாசிம் இடத்தில் நான் இருந்திருந்தால், காலை உடைத்திருப்பேன்’
x
தினத்தந்தி 14 Dec 2017 11:24 PM GMT (Updated: 14 Dec 2017 11:23 PM GMT)

‘சாயிரா வாசிம் இடத்தில் நான் இருந்திருந்தால், பாலியல் தொல்லை கொடுத்த நபரின் காலை உடைத்திருப்பேன்” என்று நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்தார்.

மும்பை,

நடிகர் அமீர்கானின் ‘தங்கல்’ படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலம் அடைந்தவர், சாயிரா வாசிம். இவர் கடந்த சனிக்கிழமை டெல்லியில் இருந்து மும்பைக்கு விமானத்தில் வந்த போது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த தொழில் அதிபரால் பாலியல் தொல்லைக்கு ஆளானார்.

இதனை செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் சாயிரா வாசிம் வெளியிட்டார். கண்ணீர்மல்க பேசி இருந்தார்.

இதைத்தொடர்ந்து, அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின. பாலியல் தொல்லைக்கு ஆளானால், உடனடியாக அந்த நபரை எதிர்த்திருக்க வேண்டியது தானே? என்று சமூக வலைதளத்தில் சாயிரா வாசிமுக்கு எதிராக கருத்துகளும் பகிரப்பட்டன.

இதற்கு நடிகை கங்கனா ரணாவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இதுபற்றி அவர் பேசியதாவது:-

விமானத்தில் தான் சந்தித்த பாலியல் தொல்லையை அவர் துணிச்சலுடன் தெரிவித்திருக்கிறார். அதேசமயம், அந்த நபர் தன்னுடைய பாதத்தை நடிகையின் கை மீது வைத்து குட்டித்தூக்கம் போட்டதாக பெரும்பாலானோர் சொல்கிறார்கள். என்னை பொறுத்தமட்டில், இது மாபெரும் தவறு. சாயிரா வாசிம் இடத்தில் நான் இருந்திருந்தால், அவரது காலை உடைத்திருப்பேன்.

இவ்வாறு கங்கனா ரணாவத் கூறினார்.

Next Story