அர்னால்டுக்கு நேர்ந்த கொடுமை..!


அர்னால்டுக்கு நேர்ந்த கொடுமை..!
x
தினத்தந்தி 9 Sep 2017 8:18 AM GMT (Updated: 9 Sep 2017 8:17 AM GMT)

அர்னால்ட் சிலை இருக்கும் ஓஹையா பகுதியில் அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது....

ர்னால்டு ஸ்வார்சனேகர் உலகின் சிறந்த பாடி பில்டர். ‘மிஸ்டர் வேல்டாக’ தேர்வு பெற்று, நடிகர் ஆனவர். ‘ஹெர்குலிஸ்’ படத்தில் அறிமுகமாகி அதன்பிறகு ‘டெர்மினேட்டர்’ வரிசை, ‘ப்ரிடேட்டர்’, ‘ரா டீல்’, ‘கமாண்டோ’, ‘எக்ஸ்பாண்டபிள் சீரிஸ்’ படங்களில் நடித்து புகழ்பெற்றார். பிறகு, சினிமா செல்வாக்கின் காரணமாக தான் வாழ்ந்த அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் கவர்னர் ஆனார். 

 அர்னால்டு கலிபோர்னியா கவர்னராக இருந்தபோது, அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றை திறந்து வைத்தார். அந்த ஓட்டலின் முன்பு அர்னால்டின் ஆள் உயரச் சிலையை வைத்து கவுரவப்படுத்தியது ஓட்டல் நிர்வாகம். அதோடு அர்னால்டு எப்போது வேண்டுமானலும் வந்து இல  வசமாக இந்த ஓட்டலில் தங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது. அர்னால்டின் கலிபோர்னியா கவர்னர் பதவி காலம் முடிந்தது. சினிமாவிலும் மார்க்கெட் போனது. சாதாரண குடிமகன் ஆனார். இந்த நிலையில் ஒரு நாள் அந்த ஓட்டலுக்கு சென்று ரூம் கேட்டிருக்கிறார் அர்னால்ட். ‘ரூம் அனைத்தும் புக் ஆகிவிட்டது. வேறு ஓட்டல் பாருங்கள்’ என்று கூறியிருக்கிறது நிர்வாகம். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அர்னால்ட், அந்த ஓட்டலின் முன்பு இருந்த தனது சிலையின் கீழேயே படுத்துக்கொண்டு அதை ஒரு போட்டோ எடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். 

அத்துடன் ‘‘நாம் பதவியில் இருக்கும்போது மெச்சப்படுவோம், புகழப்படுவோம், நமக்கு உச்சபட்ச மரியாதை தரப்படும். எப்போது நாம் பதவியையும், புகழையும் இழக்கிறோமோ அடுத்த நொடியே நாம் ஒதுக்கப்படுவோம், நமக்குத் தந்த சத்தியங்கள் காற்றில் பறக்கவிடப்படும். எந்தச் சத்தியங்களும், வாக்குறுதிகளும் உங்களுக்காக கொடுக்கப்பட்டது அல்ல. அது உங்களை அலங்கரித்த பதவிக்குக் கொடுக்கப்பட்டது. உங்கள் புகழை, உங்கள் பதவியை, உங்கள் அதிகாரத்தை, உங்கள் அறிவை ஒரு போதும் நம்பாதீர்கள்’’ என அவருடைய வலைத்தள பதிவில் இந்த வாசகங்கள் இடம்பெற்றிருந்தது. இந்தச் செய்தியும், அர்னால்டின் புகைப்படமும் உலகம் முழுவதும் வைரலாகப் பரவியது. அர்னால்டின் நிலை குறித்து அவரது ரசிகர்கள் வருத்தப்பட்டுக்கொண்டிருக்க..., இங்கே தான் இந்த திரைப்படத்திற்கான டிவிஸ்ட் வெளிப்படுகிறது. அந்தப் புகைப்படம் கடந்த வருடம் எடுக்கப்பட்டதாம். 

அர்னால்ட் சிலை இருக்கும் ஓஹையா பகுதியில் அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. அதில் கலந்துகொண்டு நடித்த அர்னால்டு படப்பிடிப்பு இடைவெளியில் அந்த சிலைமுன்பு கண்ணயர்ந்திருக்கிறார். இதை ஒருவர் படம் எடுத்து அர்னால்டிடம் காட்டியிருக்கிறார். அதை அர்னால்ட் விளையாட்டிற்காக தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ‘காலம் மாறிவிட்டது’ என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார். மற்றப்படி மானே... தேனே... பொன்மானே.... அனைத்தையும் நெட்டிசன்கள் நிரப்பிவிட்டனர். அர்னால்டை மதிக்கவில்லை. விடுதியில் இடம் அளிக்கவில்லை... என பெரிய கட்டுக்கதையை எழுதி நம்மையே நம்பவைத்துவிட்டனர். இன்னும் சில நெட்டிசன்கள் நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களால் முடிந்தது ஒரே ஒரு பார்வேட் மட்டும் தானே...! அதனால் உண்மை புரியாமல் மற்றவர்களுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். 

Next Story