அதே கண்கள்


அதே கண்கள்
x
தினத்தந்தி 31 Jan 2017 9:28 AM GMT (Updated: 31 Jan 2017 9:28 AM GMT)

கதாநாயகன்–கதாநாயகி: கலையரசன்–ஜனனி அய்யர் டைரக்‌ஷன்: ரோகின் வெங்கடேசன் கதையின் கரு: காதலில் சிக்கி பணத்தை இழந்து ஏமாறும் பார்வையற்ற இளைஞர்கள்.

கலையரசன் சிறுவயதிலேயே பார்வையிழந்து சமையல்கலையில் நிபுணத்துவம் பெற்று சொந்தமாக ஓட்டல் நடத்தி சம்பாதிக்கிறார். தோழி ஜனனி அய்யருக்கு அவர்மீது ஒருதலை காதல். தெருவில் வசிக்கும் ஏழைகளிடம் பரிதாபப்பட்டு உணவு வாங்கி கொடுத்து உதவும் ஷிவதாவுக்கும் கலையரசனுக்கும் பரிச்சயம் ஏற்பட்டு நட்பாக பழகி பிறகு காதல்வயப்படுகிறார்கள். ஒருகட்டத்தில் ரவுடி ஒருவன் ஷிவதாவை வழிமறித்து அவரது சகோதரி திருமணத்துக்கு வாங்கிய கடனை உடனடியாக திருப்பி தரும்படி மிரட்டி விட்டு போகிறான். கடனுக்காக ஷிவதாவை கடத்தப்போவதாகவும் எச்சரிக்கிறான்.

 கலையரசன் அந்த பணத்தை தந்து உதவுவதாக ஷிவதாவிடம் வாக்குறுதி கொடுக்கிறார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் ஒரு விபத்தில் சிக்கி நினைவிழந்து பல நாட்கள் ஆஸ்பத்திரியில் இருக்க நேர்கிறது. சிகிச்சையில் அவருக்கு பார்வையும் வந்து விடுகிறது. குணமடைந்த பிறகு ஷிவதாவை தேடுகிறார். அவரை காணவில்லை. ரவுடிகளிடம் சிக்கி இருப்பாரோ என்று கலங்குகிறார். குடும்பத்தினர் கலையரசனுக்கும் ஜனனி அய்யருக்கும் திருமண ஏற்பாடு செய்கின்றனர்.

அப்போது ஷிவதாவின் தந்தை கலையரசனை சந்தித்து தனது மகளை ரவுடிகள் கடத்தி விட்டதாகவும் பணம் கொடுத்தால் விட்டு விடுவார்கள் என்றும் சொல்கிறார். ஷிவதா யார்? அவரை கலையரசன் கண்டுபிடித்தாரா? என்பது திகிலான மீதி கதை.

கலையரசன் பார்வையற்ற இளைஞராக கதாபாத்திரத்தில் ஒன்றி இருக்கிறார். பார்வை வந்த பிறகு ஷிவதாவுக்கு என்ன ஆகி இருக்குமோ என்று பதற்றமாவதிலும் அவரை மீட்க நகைகளை அள்ளிக்கொண்டு ஓடுவதிலும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். துப்புதுலக்குவது திருப்பம். ஜனனி அய்யர் காதல் காட்சிகளில் கவர்கிறார்.

ஷிவதா அழகான காதலியாகவும் வில்லியாகவும் வருகிறார். தன்னை ஏமாற்றியவரை கார் ஏற்றி கொல்வதும் கலையரசனை தீர்த்து கட்ட வெறித்தனமாக மோதுவதும் அவர் கதாபாத்திரத்தை மிரட்சியாக்கி இருக்கிறது. பால சரவணன் சிரிக்க வைக்கிறார். ஜனனி அய்யர் காதலை இன்னும் உயிர்ப்பாக்கி இருக்கலாம். வித்தியாசமான களத்தில் திருப்பமும் விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்தி கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் ரோகின் வெங்கடேசன். ஜிப்ரான் இசையும் ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவும் திகில் கதைக்கு பலம் சேர்க்கிறது.


Next Story