திறப்பு விழா


திறப்பு விழா
x
தினத்தந்தி 22 May 2017 5:09 PM GMT (Updated: 22 May 2017 5:09 PM GMT)

மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தை கருவாக கொண்ட படம். மது என்ற அரக்கனால் அழிந்து போன ஒரு விவசாய குடும்பத்தையும் கதை தொட்டு செல்கிறது.

கீணனூர் என்ற அந்த குக்கிராமத்தின் விவசாயி, ‘பசங்க’ சிவகுமார். இவருடைய மனைவி, நாட்டு மருத்துவர். இவர்களுக்கு வயதுக்கு வந்த மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். சிவகுமார், மதுவுக்கு அடிமையாகிறார். மகள் திருமணத்துக்காக விதை நெல்லை விற்பதற்காக பக்கத்து ஊருக்கு போகிறார். பணத்துடன் திரும்புகிற அவருக்கு வழியில், ஒயின் ஷாப்பை பார்த்ததும் சபலம் வருகிறது. ஒயின் ஷாப்புக்குள் போய் குடிக்கிறார். போதையில், மகள் திருமணத்துக்காக வைத்திருந்த பணத்தை தொலைத்து விடுகிறார்.

போதை தெளிந்ததும், பணத்தை பறிகொடுத்ததை நினைத்து கதறுகிறார். மகள் திருமணம் நின்று போகுமே என்ற சோகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறார். அவருடைய மகள் தூக்கில் தொங்குகிறாள். கணவனும், மகளும் இறந்த அதிர்ச்சியில், மனைவி உயிரை விடுகிறார். உயிரோடு இருக்கும் ஒரே மகன் வெளியூர் போய் வளர்ந்து வாலிபனான நிலையில், சொந்த ஊருக்கு திரும்புகிறான்.

சாக்கடையை சுத்தம் செய்ய சாக்கடைக்குள் இறங்குவது போல், அந்த ஊரை மதுவின் பிடியில் இருந்து மீட்க, மதுக்கடையில் வேலைக்கு சேருகிறான். அவன் எப்படி அந்த ஊர் மக்களை மதுவின் பிடியில் இருந்து மீட்கிறான்? என்பது மீதி கதை.

மதுவுக்கு எதிராக போராடும் இளைஞராக ஜெய ஆனந்த். கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அவரை துரத்தி துரத்தி காதலிப்பவராக ரஹானா. காதலரின் சட்டையை அணிந்தபடி காதல்வசப்படும் காட்சியிலும், காதலர் திருமணத்துக்கு மறுத்ததும் சோகத்தில் முகம் வாடிப்போகும் காட்சியிலும், ரஹானா பளிச். இவருக்கு அப்பாவாக வருகிறார், ஜி.எம்.குமார்.

‘பசங்க’ சிவகுமார் தொடர்பான ‘பிளாஷ்பேக்’ கதையும், காட்சிகளும் படத்தின் ஜீவனாக அமைந்து இருக்கிறது. இவர், போதை மீதான சபலத்தில் மகள் திருமணத்துக்கு வைத்திருந்த பணத்தையும், வண்டி மாடுகளையும் பறிகொடுக்கும் காட்சியும், அதன் விளைவுகளும் உருக்கத்தின் உச்சம். கள்ளச்சாராய வியாபாரிகளாக ஜி.கமல், விஜய்சந்தர் ஆகிய இருவரும் மிரட்டுகிறார்கள்.

பசுமை புரட்சி செய்த வயல்வெளிகளையும், கிராமத்து யதார்த்தங்களையும் படம் பிடித்த விதத்தில், ஒளிப்பதிவாளர் ஆர்.பி.செல்வாவும், டைரக்டர் கே.ஜி.வீரமணியும் மனதை ஈர்க்கிறார்கள். திரைக்கதையில் வேகம் போதாது. படத்தின் ‘டைட்டில்’ கதையுடன் பொருந்தவில்லை.


Next Story