வனமகன்


வனமகன்
x
தினத்தந்தி 26 Jun 2017 10:49 PM GMT (Updated: 26 Jun 2017 10:49 PM GMT)

கதையின் கரு: காட்டை விட்டு விரட்டப்படும் பழங்குடி இளைஞன் வாழ்க்கை. தாய், தந்தையை இழந்த சாயிஷா பலகோடி சொத்துக்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் அதிபராக இருக்கிறார்.

இவருக்கு பாதுகாவலரான பிரகாஷ்ராஜ் தனது மகன் வருணுக்கு சாயிஷாவை மணமுடித்து பணத்தை அபகரிக்க திட்டமிடுகிறார். நண்பர்களுடன் அந்தமான் தீவுக்கு சுற்றுலா சென்று அங்குள்ள காட்டுப்பகுதியில் தங்குகிறார் சாயிஷா.

அப்போது பழங்குடி மக்களை போலீஸ் உதவியுடன் விரட்டியடித்து அவர்கள் வசித்த பகுதியை ஒரு கார்பரேட் கம்பெனி அபகரிக்க முயற்சிக்கிறது. பழங்குடி இளைஞரான ஜெயம்ரவி தப்பி ஓடும்போது அவர் மீது சாயிஷா கார் மோதுகிறது. உயிருக்கு போராடும் ஜெயம்ரவியை போலீசுக்கு பயந்து சென்னைக்கு அழைத்து வந்து மருத்துவ மனையில் சேர்க்கிறார் சாயிஷா.

தலையில் அடிபட்டதால் பழைய நினைவுகளை மறக்கிறார் ஜெயம்ரவி. தனது வீட்டில் அவரை தங்க வைத்து வாசி என்று பெயரும் சூட்டி நகரத்து வாழ்க்கையை கற்றுக்கொடுக்கிறார் சாயிஷா. ஒரு கட்டத்தில் வருண், சாயிஷாவிடம் தன்னை மணக்கும்படி பலவந்தம் செய்ய அவரை அடித்து குற்றியிராக தூக்கி வீசுகிறார். அப்போது அந்தமான் போலீசார் அங்கு வந்து ஜெயம்ரவியை கைது செய்து தங்கள் நாட்டுக்கு கொண்டு சென்று கொல்ல முயற்சிக்கின்றனர்.

ஜெயம்ரவியை தேடி அந்தமான் செல்லும் சாயிஷா போலீசாரிடம் இருந்து அவரை மீட்டுக்கொண்டு காட்டுக்குள் ஓடுகிறார். பிரகாஷ்ராஜும் ஜெயம்ரவியை தீர்த்துகட்டி விட்டு சாயிஷாவை மீட்க போலீஸ் படையுடன் இறங்குகிறார். அவர்களிடம் இருந்து இருவரும் உயிர் பிழைக்க நடத்தும் போராட்டமும் பழங்குடியினர் வசித்த இடத்தை ஜெயம்ரவி மீட்டாரா? என்பதும் மீதி கதை.

ஜெயம்ரவி பழங்குடி இளைஞர் கதாபாத்திரத்துக்காக முரட்டுத்தனமாக தன்னை உருமாற்றி விருதுக்குரிய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சாயிஷா வீட்டுக்குள் சுவரை உடைத்து குதிப்பது, முற்றத்தில் நிற்கும் மரத்தின் மீது தாவி கிளையை கட்டிப்பிடித்து தூங்குவது, டெலிவி‌ஷனில் வனவிலங்குகளை பார்த்து அம்பு விடுவது, செல்போனில் தெரியும் பெண்ணின் படத்தை பார்த்து மிரட்சியாவது என்று கதாபாத்திரமாக வாழ்ந்து இருக்கிறார்.

தனது முதுகில் தடவும் சாயிஷாவின் அன்பு பரிசத்தில் கிறங்கும் உணர்வை வெளிப்படுத்துவதில் ஜீவன். சாயிஷாவிடம் அத்துமீறும் வருணை அடித்து துவைத்து ரணகளப்படுத்துவதில் ஆக்ரோ‌ஷம் காட்டுகிறார். காட்டுக்குள் போலீசாருடன் நடக்கும் சண்டையில் ஹாலிவுட் மிரட்சி.

சாயிஷா வசீகரிக்கிறார். நடனத்தில் உடம்பை வளைத்து நெளித்து சுழன்று அசர வைக்கிறார். விழிகளில் காதல் உணர்வுகளையும் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார். பிரகாஷ்ராஜ் அனுபவ நடிப்பால் கவர்கிறார். தம்பிராமையா சிரிக்க வைக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் சாம்பால், வருண், சண்முகராஜன், அர்ஜுன், வேலராமமூர்த்தி கதாபாத்திரங்களும் கச்சிதமாக உள்ளன.

காட்டுக்குள் பயணிக்கும் கதையை இன்னும் விறுவிறுப்பாக்கி இருக்கலாம். காடு அழிப்புக்கு எதிரான கருவை வைத்து சமூக அக்கறையுடன் அழுத்தமாக காட்சிகளை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் விஜய். நகரத்தையும் காட்டின் அழகையும் அம்சமாக படம் பிடித்து உள்ளது திருநாவுக்கரசுவின் கேமரா. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்களும் அதை படமாக்கிய விதமும் அழகு.


Next Story