திரி


திரி
x
தினத்தந்தி 18 July 2017 9:31 AM GMT (Updated: 18 July 2017 9:31 AM GMT)

கதையின் கரு: ஆத்திரத்தில் கை நீட்டியதால், ஒரு இளைஞனுக்கு வரும் பிரச்சினைகள். ஜெயப்பிரகாஷ், ஒரு பள்ளிக்கூட ஆசிரியர். மாணவர்கள் மத்தியில் ஒழுக்கத்தை விதைப்பவர்.

தன் மகன் அஸ்வின், மகள் வைசாலி ஆகிய இருவரும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அநியாயம் நடந்தால் அதை தட்டிக் கேட்க வேண்டும் என்று நினைக்கிற துணிச்சல்காரர், அஸ்வின். அவர் மீது ஒரு கார் மோதுகிறது. அஸ்வின் ஆத்திரத்தில், காரில் வந்த அர்ஜை கன்னத்தில் அறைந்து விடுகிறார்.

அர்ஜை, ஒரு பணக்கார இளைஞர். முன்னாள் அமைச்சர் ஏ.எல்.அழகப்பனின் மகன். அஸ்வினுக்கும், அர்ஜைக்கும் இடையே பகை வளர்கிறது. இந்த நிலையில், கல்லூரி படிப்பை முடிக்கிறார், அஸ்வின். அவருடைய நடத்தைக்கான சான்றிதழில், ‘மோசமானவர்’ என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதற்கு காரணமானவர்கள் ஏ.எல்.அழகப்பனும், அர்ஜையும் என்பதை கண்டுபிடிக்கிறார், அஸ்வின். தனது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி அழகப்பனையும், அர்ஜையையும், அஸ்வின் எப்படி பழிவாங்குகிறார்? என்பது மீதி கதை.

அஸ்வின் வசீகர முகம் கொண்ட உயரமான கதாநாயகன். கல்லூரி மாணவராக, தந்தைக்கு பயந்த மகனாக கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார். காதல் மற்றும் சண்டை காட்சிகளிலும் ரசிக்கும்படி நடித்து இருக்கிறார். ஸ்வாதி, ஊடக நிருபராக வருகிறார். படத்தில் இவருக்கு அதிக வேலை இல்லை. ஜெயப்பிரகாஷ், நல்ல ஆசிரியராக-கண்ணியமான குடும்பத் தலைவராக-பாசமுள்ள அப்பாவாக மனதில் பதிந்து விடுகிறார்.

நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும் ஒரு மோசமான அரசியல்வாதியை அப்படியே பிரதிபலிக்கிறார். கருணாகரனும், சென்ராயனும் சிரிக்க வைக்கிறார்கள். வில்லத்தனமான போலீஸ் அதிகாரியாக சேரன்ராஜ், அவ்வப்போது வந்து மிரட்டி விட்டு போகிறார். பணக்கார வில்லன் கதாபாத்திரத்தில் அர்ஜை பொருந்தியிருக்கிறார்.

சண்டை காட்சிகளிலும், துரத்தல் காட்சிகளிலும் பின்னணி இசை, பேரிரைச்சலாக இருக்கிறது. ஒளிப்பதிவு, காட்சிகளுக்கு வலுவூட்டுகிறது. கல்வி தொடர்பான வசன வரிகள், பல இடங்களில் கைதட்ட தோன்றுகிறது. நடுத்தர வகுப்பை சேர்ந்த துணிச்சல் மிகுந்த இளைஞன், அவனை சுற்றி வரும் நண்பர்கள், பணக்கார அரசியல்வாதியுடன் மோதல் என வழக்கமான கதைதான். அதையே சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார், டைரக்டர் எஸ்.அசோக் அமிர்தராஜ்.

Next Story