குரங்கு பொம்மை


குரங்கு பொம்மை
x
தினத்தந்தி 2 Sep 2017 5:01 PM GMT (Updated: 2 Sep 2017 5:00 PM GMT)

கதையின் கரு: கோவிலில் திருடப்பட்ட ஒரு ஐம்பொன் சிலையும், அதை விற்று ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட ஒரு ஆசாமியும்...

பி.எல்.தேனப்பன், கோவில் சிலைகளை திருடி கடத்துபவர். அவருடைய மரக்கடையில் கூலி வேலை செய்பவர், பாரதிராஜா. இவருடைய முதுமையையும், அப்பாவித்தனமான தோற்றத்தையும் தேனப்பன் தனது சிலை கடத்தலுக்கு பயன்படுத்திக் கொள்கிறார். ரூ.5 கோடி மதிப்புள்ள ஒரு ஐம்பொன் சிலையை பாரதிராஜா மூலம் சென்னைக்கு கடத்துகிறார்.
சென்னையில், அவருடைய ஏஜெண்டாக செயல்படுகிறார், குமரவேல்.

பாரதிராஜா கொண்டு வந்த ரூ.5 கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலை, குமரவேலுவுக்குள் பேராசையை ஏற்படுத்துகிறது. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, சிலையை கொண்டு வந்த பாரதிராஜாவை கொன்று விடுகிறார். “உங்க ஆள் சென்னைக்கு வரவேயில்லை...சிலையுடன் தலைமறைவாகி விட்டார்” என்று தேனப்பனிடம் பொய் சொல்கிறார்.
பாரதிராஜாவின் மகன் விதார்த், அப்பாவை தேடி அலைகிறார். அப்பா காணாமல் போனதற்கும், குமரவேலுவுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கிறார். அவர் குமரவேலுவை என்ன செய்கிறார்? என்பது, ‘கிளைமாக்ஸ்.’

ஒரு நடுத்தர குடும்பத்தின் வயதான பெரியவராக பாரதிராஜா. பேச்சு கூட அதிகம் வராத முதியவராக-மகன் மீது அபரிமிதமான பாசம் கொண்ட தந்தையாக-பாரதிராஜா கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். குமரவேலுவின் கொலை வெறியை புரிந்து கொண்டு, “நீ என்னை கொல்லப் போறே...அதற்கு முன் என் மகனிடம் ஒரே ஒரு முறை பேசிவிட்டு வந்து விடுகிறேன்” என்று அவர் கெஞ்சும்போது, அய்யோ பாவமாக நெகிழவைத்து விடுகிறார்.

இவருடைய மகனாக விதார்த், மிக இயல்பாக நடித்து இருக்கிறார். இவருக்கும், டெல்னா டேவிசுக்குமான அறிமுகமும், மோதலுக்கு பின் வரும் காதலும், ரசனை. குரங்கு பொம்மை போட்ட கைப்பையை கைப்பற்ற திருடனை துரத்திக் கொண்டு சந்து சந்தாக ஓடுவது, அப்பாவை தேடி ஒவ்வொரு தாதாவையும் சந்திப்பது, கடைசியில் கொலையாளி குமரவேலுவை கண்டுபிடித்து அடித்து துவம்சம் செய்வது....என கதாநாயகனுக்குரிய வேலைகளை பிசிறு இல்லாமல் செய்து இருக்கிறார், விதார்த். கதாநாயகி டெல்னா டேவிசுக்கு அதிக வேலை இல்லை.

கோவில் சிலைகளை திருடி விற்கும் பெரிய மனிதர் ஏகாம்பரமாக பி.எல்.தேனப்பனும், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ஏகாம்பரத்தை ஏமாற்றும் நம்பிக்கை துரோகியாக குமரவேலுவும், வில்லன் வேடங்களில் மிரட்டுகிறார்கள். இருவருமே வில்லத்தனத்தை முகத்தில் காட்டிக் கொள்ளாத கொலைகாரர்களாக பயமுறுத்துகிறார்கள். கஞ்சா கருப்பு ஒரே ஒரு காட்சியில் தோன்றி, சிரிக்க வைக்கிறார்.

என்.எஸ்.உதயகுமாரின் ஒளிப்பதிவும், அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு உயிரூட்டியுள்ளன. காட்சிகள் அழுத்தமாக மனதில் பதிகிற மாதிரி விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் நித்திலன். ஒரு திகில் படத்துக்குரிய வேகமும், அடுத்தது என்ன? என்ற பதற்றமும் படம் முழுக்க இருப்பதால், ஆரம்பம் முதல் இறுதி வரை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. திணிக்கப்பட்டுள்ள பாடல் காட்சிகள், வேகத்தடை. ‘கிளைமாக்ஸ்,’ சரியான தீர்ப்பு.


Next Story