சென்னையில் ஒருநாள்-2


சென்னையில் ஒருநாள்-2
x
தினத்தந்தி 19 Oct 2017 11:57 PM GMT (Updated: 19 Oct 2017 11:57 PM GMT)

மருத்துவ கண்டுபிடிப்பை கைப்பற்ற முயற்சிக்கும் வில்லன். கோவை நகரில், ஒரு அதிகாலைப் பொழுதில் கதை ஆரம்பிக்கிறது.

கதையின் கரு:  உயர் போலீஸ் அதிகாரியான சரத்குமார் சென்னையில் இருந்து கோவைக்கு வேலை மாறுதலாகி வருகிறார். முதல் நாளிலேயே அவருக்கு பிரச்சினை காத்திருக்கிறது. “ஏஞ்சலின் மரணம் இன்றா? நாளையா? என்று கோவை நகரம் முழுவதும் சுவரொட்டி ஒட்டப்படுகிறது. அந்த சுவரொட்டியை அப்படியே சும்மா விட்டு விட முடியாது என்று கமிஷனர் நெப்போலியன், உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டுகிறார். சுவரொட்டி மர்மத்தை கண்டுபிடிக்கும் பொறுப்பை சரத்குமாரிடம் ஒப்படைக்கிறார்.

சரத்குமார், உதவியாளர் முனீஸ்காந்தை அழைத்துக்கொண்டு துப்பு துலக்க புறப்படுகிறார். ஒரு விபத்தில் அக்காளையும், அவருடைய கணவரையும் பறிகொடுத்த சரத்குமார், அவர்களின் மகனையும், 2 மகள்களையும் தன் பாதுகாப்பில் வைத்து இருக்கிறார். அவர்களில் மூத்த பெண்ணுக்கு விடிந்தால் நிச்சயதார்த்தம் என்ற நிலையில், சரத்குமார் ஏஞ்சலினை தேடி அலைகிறார்.

அந்த ஏஞ்சலின் யார், அவரை கொல்லப் போவதாக சுவரொட்டி மூலம் மிரட்டிய மர்ம ஆசாமி யார், அவனை சரத்குமார் கண்டுபிடித்து கைது செய்தாரா? என்ற கேள்விகளுக்கு பதில், படத்தின் இரண்டாம் பாகத்தில் இருக்கிறது.

முகத்தில் ஸ்டைலான தாடி, கண்களில் கருப்பு கண்ணாடி சகிதம் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் சரத்குமார். போலீஸ் அதிகாரி வேடத்தில், நூற்றுக்கு நூறு சதவீதம் பொருந்துகிறார். அதிகமாக அலட்டிக் கொள்ளாமல், யதார்த்தமாக நடித்து இருக்கிறார். ஏஞ்சலின் யார்? என்பதை கண்டுபிடிக்க அவர் ஒவ்வொரு கட்டமாக குற்றவாளியை நெருங்குவது, படத்தில் விறுவிறுப்பை கூட்டு கிறது. குறிப்பாக அவர், சுஹாசினி நிர்வகித்து வரும் பெண்கள் மனநல காப்பகத்துக்கு செல்லும் காட்சி, பதற்றமூட்டுகிறது. மனநோயால் பாதிக்கப்பட்ட ஏஞ்சலின் தங்கையை சந்தித்து விசாரணை நடத்தும் இடம், திகிலின் உச்சம். 13-ஏ என்ற அறையில், சுவப்னா என்ற பெண் தூக்கில் தொங்குவது, எதிர்பாராத அதிர்ச்சி.

கமிஷனர் வேடத்தில், நெப்போலியன் கம்பீரம். இரண்டே இரண்டு காட்சிகளில் மட்டும் அவர் வருகிறார். அவர் தொடர்பான காட்சிகளை இன்னும் கொஞ்சம் நீளமாக்கி இருக்கலாம். சுஹாசினி மனநல மருத்துவராக வரும் அந்த 20 நிமிட காட்சி, இருக்கை நுனியில் உட்கார வைக்கிறது. ‘சீரியஸ்’ ஆக செல்லும் கதையோட்டத்தின் இடையிடையே முனீஸ்காந்த், மனைவி...திருமண நாள்...என்று ‘காமெடி’ செய்கிறார்.

ஜாக்ஸ் பெஜாயின் பின்னணி இசை, படத்துக்கு திகிலூட்டுகிறது. படத்தின் மிக சிறந்த அம்சம், விஜய் தீபக்கின் ஒளிப்பதிவு. இருள் நீங்காத அதிகாலைப்பொழுதையும், வாகன ஓட்டம் இல்லாமல் அமைதியாக விரிந்து கிடக்கும் சாலைகளையும், இருட்டு அறைகள், அபாயகரமான குடோன்களையும் படம் பிடித்து இருக்கும் நேர்த்திக்கு பாராட்டுகள்.

கோவையில் நடைபெறும் கதைக்கு ஏன், ‘சென்னையில் ஒருநாள்-2’ என்ற டைட்டில்? மர்ம கொலைகளுக்கு காரணம், அந்த மருத்துவ கண்டுபிடிப்புதான் என்ற முடிவு, யூகிக்க முடியாத ‘கிளைமாக்ஸ்.’

Next Story