இந்திரஜித்


இந்திரஜித்
x
தினத்தந்தி 30 Nov 2017 5:17 PM GMT (Updated: 30 Nov 2017 5:16 PM GMT)

மருத்துவ குணம் கொண்ட அதிசய கல்லும் அதை தேடும் இளைஞனும், கவுதம் கார்த்திக் நடித்துள்ள "இந்திரஜித்" புதிய படத்திற்கான விமர்சனத்தை பார்க்கலாம்.

கதையின் கரு: சூரியனில் இருந்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதிசய கல் ஒன்று பூமியில் விழுகிறது. அதற்கு மனிதர்களின் நோயை குணப்படுத்தும் சக்தி இருப்பதால் அந்நியர்கள் படையெடுப்புகளில் இருந்து காப்பாற்ற சித்தர்கள் ரகசிய இடத்தில் மறைத்து வைக்கின்றனர். அந்த கல்லை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் இந்திய தொல்பொருள் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி சச்சின் கேடேகர். அவருக்கு உதவியாளராக சேருகிறார் கவுதம் கார்த்திக்.

இவர்களின் திட்டம் தொல்பொருள் நிறுவனத்தின் தற்போதையை அதிகாரி சுதான்ஷு பாண்டேவுக்கு தெரிய வருகிறது. அவரும் கல்லை தேடுகிறார். வட இந்தியாவில் உள்ள காட்டுப்பகுதி குகைக்குள் அந்த கல்லை சித்தர்கள் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்து அதை எடுப்பதற்காக கவுதம் கார்த்திக்கும் சச்சின் கேடேகரும் பயணப்படுகின்றனர்.

அவர்களை சுதான்ஷு பாண்டே குழுவினரும் அவர்களை பின்தொடர்கிறார்கள். காட்டில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கியுடன் அலைகிறார்கள். வன விலங்கு ஆபத்துகளும் நிறைந்து கிடக்கிறது. அதில் இருந்து தப்பி அதிசய கல்லை கண்டுபிடித்தார்களா? என்பது மீதி கதை.
கவுதம் கார்த்திக் துறுதுறுவென வருகிறார். சிக்கலான விஷயங்களை கலகலப்பாக அணுகும் அவரது கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது. காட்டுக்குள் நடத்தும் வீரதீர சாகசங்களில் கவனம் ஈர்க்கிறார். வில்லன்களுடன் மோதும் மோட்டார் சைக்கிள், ஜீப் சேசிங் காட்சிகள், மலை உச்சியில் இருந்து அருவிக்குள் பாய்வது, பயங்கரமான குகைக்குள் புகுந்து அதிசய கல்லை தேடுவது என்று சாகசங்களில் கெத்து காட்டுகிறார். அதிரடிகளிலும் வேகம் காட்டி இருக்கிறார்.

அஷ்ரிதா ஷெட்டி, சோனாரிகா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக வருகிறார்கள். காட்டுக்குள் அஷ்ரிதா ஷெட்டி யானை சவாரி செய்துள்ளார். காதல் காட்சிகள் ஈர்க்கவில்லை. இந்திரஜித் குழுவினருக்கு பாதுகாவலராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் சிரிக்க வைக்கிறார். சச்சின் கேடேகர், சுதான்ஷு பாண்டே இருவரும் கதாபாத்திரங்களில் அழுத்தமாய் பதிகிறார்கள்.

கிளைமாக்சில் யார் நல்லவர், கெட்டவர்? என்பது எதிர்பாராத திருப்பம்.
அதிரடி, சாகசங்கள், கிராபிக்ஸ் மிரட்டல்களுடன் ஹாலிவுட் பாணியில் விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்துகிறார் இயக்குனர் கலாபிரபு. அருணாச்சல பிரதேச காடுகளின் பிரமிப்பை அழகாக காட்சிப்படுத்தி உள்ளது ராசாமதியின் கேமரா. கேபி பின்னணி இசை படத்தோடு ஒன்ற வைத்து இருக்கிறது.

Next Story