‘அத்தை பருவமே அதிக ஆனந்தம் தருகிறது..’ - நடிகை கரீஷ்மா கபூர் நெகிழ்ச்சி


‘அத்தை பருவமே அதிக ஆனந்தம் தருகிறது..’ - நடிகை கரீஷ்மா கபூர் நெகிழ்ச்சி
x
தினத்தந்தி 5 Feb 2017 10:24 AM GMT (Updated: 5 Feb 2017 10:24 AM GMT)

கரீஷ்மா கபூர் இந்தி திரை உலகின் முன்னாள் கவர்ச்சிக் கன்னியாக இருந்தாலும், இப்போதும் அதே அழகு- ஆளுமை- தோற்றத்துடன் வலம் வருகிறார்.

ரீஷ்மா கபூர் இந்தி திரை உலகின் முன்னாள் கவர்ச்சிக் கன்னியாக இருந்தாலும், இப்போதும் அதே அழகு- ஆளுமை- தோற்றத்துடன் வலம் வருகிறார். குடும்பத்தலைவியாகி, பொறுப்புள்ள தாயாக தனது குழந்தைகளையும் வளர்த்து வருகிறார். அவர் தனது கணவர் சஞ்சயை கடந்த ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். மகள் சமீராவிற்கு 12 வயது. மகன் கியான் வயது 7.

விளம்பர தூதர், விளம்பர படங்களில் நடிப்பவர், எழுத்தாளர், தொழிலதிபர் போன்ற பல நிலைகளில் தன்னை வலுப்படுத்திக் கொண்டிருக்கும் அவரிடம் சில கேள்விகள்:

நடிகையாக இல்லாத தற்போதைய வாழ்க்கை எப்படி இருக்கிறது?

நன்றாக இருக்கிறது. வித்தியாசமாகவும், புதுமையாகவும் ஏதாவது செய்ய முடிகிறது. இப்போதும் நான் எனது தனித்துவத்தை நிலைநிறுத்துகிறேன். எனது ஆடை, அணிகலன்களை பலரும் பாராட்டுகிறார்கள். எனவே பேஷன் தொடர்புடைய துறையில் ஏதாவது சாதிக்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

உங்கள் கட்டுடல் ரகசியம் என்ன?

நான் உடலுக்காகவோ, அழகுக்காகவோ பெரிதாக எந்த முயற்சியும் மேற்கொள்வதில்லை. நம்பிக்கையான எண்ணங்கள் நமது உடலுக்கும், மனதுக்கும் அழகூட்டும். முகத்திலும் பிரகாசத்தை ஏற்படுத்தும். நான் எதையும் பிரச்சினையாக கருதாமல் நம்பிக்கையுடன் இருக்கிறேன். உடலுக்கும், அழகுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தால், எல்லா வயதிலும் அழகும், பொலிவும் முகத்தில் தங்கும். சரியான உணவை உண்கிறேன். தேவையான அளவு தண்ணீர் பருகுகிறேன். இதெல்லாம் அழகிற்கானதல்ல. அவசியமானது. வளரும் பருவத்தில் அம்மா சொல்லித் தந்ததை பின்பற்றியதால் நல்ல அழகுடன் திகழ்கிறேன். தவறாமல் தலைக்கு எண்ணெய் வைப்பேன். என் அம்மா சிறுவயதில் இருந்தே, சில துளி எண்ணெய்யை என் முகத்திலும் தேய்த்துவிடுவார். இப்போதும் அதை தொடர்கிறேன்.

விதவிதமாக சாப்பிடும் பழக்கம் சில நடிகைகளிடம் இருக்கிறது. சாப்பாட்டில் நீங்கள் எப்படி..?


நான் சாப்பிடுவதில் குறை வைப்பதில்லை. நிறையவே சாப்பிடுகிறேன். அதைவிட அதிகமாக உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதிலும் கவனம் செலுத்து கிறேன். நடைப்பயிற்சி செல்வேன். யோகா செய்வேன். உடலுக்கு தேவையான உணவையும் கொடுக் கிறேன். உடற்பயிற்சியும் செய் கிறேன்.

உங்களுக்கு பிடித்த உணவு?

எனக்கு நிறைய உணவுகள் பிடிக்கும். எதை சொல்வது, எதை தவிர்ப்பது என்று தெரியவில்லை. சிக்கன் பிரியாணி, காலிபிளவர் பருப்பு குழம்பு, சாக்லெட் வகைகள், கேக் வகைகள், மொறுமொறுப்பான வறுத்த பண்டங்கள் எல்லாம் பிடிக்கும். புதிய சுவையுடன் எந்த உணவு கிடைத்தாலும் சாப்பிட்டுப் பார்க்கத் தோன்றும். அந்த வாய்ப்புகளை தவறவிடமாட்டேன்.

உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கற்றுக்கொடுத்த வாழ்க்கைப் பாடங்கள்?

அடிப்படையான விஷயங்களை கற்றுக்கொடுத்திருக் கிறேன். என் பெற்றோரிடம் இருந்து எனக்கு கண்டிப்பும், கனிவும் கிடைத்தது. அதையே என் பிள்ளைகளுக்கும் கொடுக்கிறேன். அவர்களுக்கு வாழ்க்கையின் யதார்த்தங்களை புரியவைக்கிறேன். தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டிய அனுபவம் நேரலாம் என்பதையும், நெருக்கடிகள் நம்மை முற்றுகையிடலாம் என்பதையும் விளக்கி புரிய வைத்திருக்கிறேன். பெரியவர்கள் கூறும் அறிவுரை மதிப்புமிக்கது என்பதையும் உணர்த்தியிருக்கிறேன். என் வளர்ச்சிக்கு எதெல்லாம் அடிப்படையாக இருந்தது என்பதையும் குழந்தைகளுக்கு விளக்குகிறேன்.

குழந்தைகளிடம் இருந்து நீங்கள் ஏதாவது கற்றுக் கொண்டீர்களா?

தினமும் அவர்களிடம் இருந்து ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ளலாம். தொழில்நுட்ப விஷயங்களில் என் குழந்தைகள் மேம்பட்டவர்களாக உள்ளார்கள். நான் அவர்களிடம் இருந்து தொழில் நுட்ப அறிவை கொஞ்சம் கற்றிருக்கிறேன்.

உங்கள் குழந்தைகள் திரை உலகிற்கு வர விரும்பினால்..?

சினிமா துறையில்தான் அவர்கள் செயல்பாடு இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் எதை விரும்புகிறார்களோ, அதையே செய்ய வேண்டும் என்று நான் கூறுவேன். நான் நடிக்க ஆசைப்படுவதாக கூறியபோது என் பெற்றோர் பயந்தார்கள். சினிமா பெண்களுக்கு கடும் சவால் நிறைந்த துறை என்று அச்சப்பட்டார்கள். நிறைய அறிவுரை வழங்கினார்கள். இன்று நான் எனது குழந்தைகளுக்கு நம்பிக்கை தருவேன். விரும்பினால் சினிமா துறையில் ஈடுபட பச்சைக்கொடி காட்டுவேன். அவர்களின் ஆசைகளுக்கு காலம்தான் பதில்சொல்லவேண்டும்.

நடிகை என்ற வட்டத்தை தாண்டிய சாதாரண கரீஷ்மா எப்படி இருப்பார்?

எப்போதும் இதே கரீஷ்மாவாகத்தான் நான் இருப்பேன். மிகவும் சாதாரணமாகவே நடந்து கொள்வேன். நான் பள்ளிக்குச் சென்று வெளியே காத்திருந்துதான் என் குழந்தைகளை அழைத்து வருகிறேன். சில நாட்கள் வகுப்பறை வரைகூட சென்றிருக்கிறேன். மற்றவர்களைப்போல நானும் சாதாரண பெண்தான். சராசரி பெண் போன்று வாழவே நான் விரும்புகிறேன்.

வயது அதிகமாகி அத்தைப் பருவத்தை அடைந்துவிட்டதை நினைத்து வருத்தப்படுவீர்களா?


இல்லை. இது ஒரு வாழ்க்கைப் பருவம். மிக மிக ஆச்சரியமான அனுபவங்கள் நிகழும் பருவமாகவே இதை உணர்கிறேன். இந்த பருவத்தில் எனக்குள் இரக்கம், விட்டுக்கொடுக்கும் எண்ணம் அதிகரித்துள்ளது. நான் அத்தையாகி விட்டதால் நிறைய மருமகன்கள் கிடைக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என் மகனுக்கு வழங்குவது போல் அறிவுரை வழங்குவேன். வயதாவதைப் பற்றி வருத்தப்பட எதுவும் இல்லை. 

Next Story