நெல்லை அருகே கிராம சுயாட்சி திட்டத்தில் இலவச சமையல் எரிவாயு இணைப்பு


நெல்லை அருகே கிராம சுயாட்சி திட்டத்தில் இலவச சமையல் எரிவாயு இணைப்பு
x
தினத்தந்தி 23 April 2018 1:53 AM GMT (Updated: 23 April 2018 1:53 AM GMT)

நெல்லை அருகே கிராம சுயாட்சி திட்டத்தில் இலவச சமையல் எரிவாயு இணைப்பை அரசின் முதன்மை செயலாளர் ராஜேந்திரகுமார் வழங்கினார்.

நெல்லை, 

மத்திய அரசின் கிராம சுயாட்சி திட்டத்தின் மூலம் இலவச சமையல் எரிவாயு இணைப்பு மற்றும் மானிய விலையில் எல்.இ.டி. பல்புகள் வழங்கும் விழா நெல்லையை அடுத்த திருவேங்கடநாதபுரத்தில் நடந்தது. நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். அரசின் முதன்மை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பாளருமான ராஜேந்திரகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு மற்றும் எல்.இ.டி. பல்புகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசும் போது, “நெல்லை மாவட்டத்தில் 29 கிராம பஞ்சாயத்துகளில் கிராம சுயாட்சி இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு இல்லாத குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. மின்சார சிக்கனத்தை கவனத்தில் கொண்டு மானிய விலையில் எல்.இ.டி. பல்புகள் வழங்கப்படுகின்றன. 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வங்கி கணக்குகளை தொடங்க வேண்டும். மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்தில் சேர வேண்டும். கிராம சுயாட்சி திட்டத்தில் மத்திய அரசு 7 வகையான திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது“ என்றார்.

இந்த விழாவில் நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, கிராம சுகாதார இயக்க மத்திய பார்வையாளர்கள் கலாதரன், பத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மானூர் அருகே உள்ள தென்கலம் கிராமத்தில் கிராம சுயாட்சி திட்டம் தொடங்கப்பட்டது. தொடக்க நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி தலைமை தாங்கினார். தாழையூத்து பாரத் கியாஸ் நிறுவன மேலாளர் யூசுப் வரவேற்று பேசினார். கிராம சுகாதார இயக்க மத்திய பார்வையாளர்கள் கலாதரன், பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, மானிய விலையில் எல்.இ.டி. பல்புகளை வழங்கினர். விழாவில் பஞ்சாயத்து உதவி இயக்குனர் கல்யாணசுந்தரம், பாரத் கியஸ் துணை பொதுமேலாளர் விஜய், மாவட்ட வழங்கல் அலுவலர் புண்ணியகோட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story