புதிய செய்திகள்
காஷ்மீர் பள்ளத்தாக்கில் லேசான நிலநடுக்கம்
ஸ்ரீநகர், பிப்.4-

காஷ்மீர் பள்ளத்தாக்கு, தலைநகர் ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.7ஆக பதிவாகியிருந்தது. இதுகுறித்து பேரிடர் மேலாண்மை அமீர் அலி கூறும் போது இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியில் மையம் கொண்டிருந்து. இதனால் உயிரிழப்புகளோ சேதமோ எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார். 4.2.2012 8.10 PM

அடுத்த ஆண்டு மத்தியில் மின் பற்றாக்குறை முழுவதும் நீக்கப்படும்: ஜெயலலிதா

சென்னை, பிப்.4-

நமது மாநிலத்தில் துவக்கப்பட்டுள்ள மின் திட்டங்களை விரைந்து செயலாக்கத்திற்கு கொண்டு வருவது தான் மின் பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதால் தான், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நடப்பு நிதியாண்டில் ரூ.6,455 கோடி அளவுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மின்பற்றாக்குறை நடப்பாண்டு ஜுன் மாதம் முதல் படிப்படியாக குறைக்கப்பட்டு, அடுத்த ஆண்டு 2013 மத்தியில், மின் பற்றாக்குறை முழுவதுமாக நீக்கப்பட்டுவிடும். என்று சட்டசபையில் ஜெயலலிதா கூறியுள்ளார். 4.2.2012 7.47 PM

இந்தியாவின் தீர்வு இனப்பிரச்சினைக்கு உதவாது: ராஜபக்சே
கொழும்பு, பிப்.4-

இலங்கை அதிபர் ராஜபக்சே, அந்த நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி கூறியதாவது:- இனப்பிரச்சினையில் இலங்கை பாராளுமன்ற தேர்வுக்குழுவின் வழிமுறைதான் தீர்வு காண முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். பிரச்சினைக்கு தீர்வு காண்பதில், இறக்குமதி செய்யப்பட்ட தீர்வினையும், வெளிநாட்டு செல்வாக்கினை பயன்படுத்துவதையும் விட, இந்த நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப பாராளுமன்ற தேர்வுக்குழுவில் பங்கேற்க வேண்டியது கடமை ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.ராஜபக்சேயின் இந்த கருத்துக்கள், ஏற்கனவே ஏற்றுக்கொண்டபடி இந்தியாவின் ஆதரவு பெற்ற அரசியல் சட்ட திருத்தத்துக்கு எதிராக பல்டி அடித்திருப்பதையே இது காட்டுகிறது. 4.2.2012 7.13 PM
மத்திய அரசு ஊழல் மிகுந்தது என்ற அபிப்பிராயம் மாறிவிடாது: பாரதீய ஜனதா
புதுடெல்லி, பிப்.4-

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் உள்துறை மந்திரி ப.சிதம்பரத்தையும் சேர்த்து விசாரிக்கவேண்டும் என்று கோரி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த மனுவை, டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு இன்று தள்ளுபடி செய்து விட்டது. இதுபற்றி பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத்திடம் நிருபர்கள் கருத்து கேட்ட போது அவர் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ப.சிதம்பரத்துக்கு எதிரான மனு தனிக்கோர்ட்டில் தள்ளுபடி ஆனதால் மட்டும், மத்திய அரசு ஊழல் மிகுந்தது என்ற அபிப்பிராயம் மாறிவிடாது என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார். 4.2.2012 6.34 PM

தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கும் பணி நாளை முதல் தொடங்குகிறது: அன்பழகன் அறிவிப்பு
சென்னை, பிப்.4-

தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கும் பணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்குகிறது. ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரை உறுப்பினர்களை சேர்த்தல்-புதுப்பித்தல் பணிகளை நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் திருத்தப்பட்ட விதிகளின்படி மேற்கொள்ள வேண்டும் என தலைமைக் கழகம் முடிவெடுத்துள்ளது. என்று தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். 4.2.2012 6.03 PM
சிரியாவில் கலவரம் நீடிப்பு: ஒரே நாளில் 217 பேர் கொல்லப்பட்டனர்
பெய்ரூட், பிப்.4-

சிரியாவில் அதிபர் பஷிர் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 10 மாதங்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்துவோருக்கு எதிராக ராணுவம் ஏவி விடப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஹோம்ஸ் நகரில் அதிபருக்கு எதிராக ஏராளமானோர் இன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கு ராணுவத்தினர் பீரங்கிகளுடன் விரைந்தனர். பின்னர் ராணுவத்தினர் பீரங்கிகள் மூலம் பலமுறை சுட்டார்கள். இதில் 36 வீடுகள் அடியோடு இடிந்தன. வீடுகளில் இருந்த ஏராளமான மக்கள் இடிபாடுகளில் சிக்கினார்கள். இங்கு நடைபெற்ற ராணுவ தாக்குதலில் 217 பேர் கொல்லப்பட்டனர். காலிடியா என்ற இடத்தில் மட்டும் 138 பேர் பலியானார்கள். மேலும் 800-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 4.2.2012 5.57 PM

எகிப்து நாட்டில் ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் மேலும் 2 பேர் பலி
கெய்ரோ, பிப்.4-

எகிப்து நாட்டில் போர்ட் செட் நகரில் நடைபெற்ற கால்பந்து போட்டி மைதானத்தில் வன்முறை ஏற்பட்டு 74 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை கண்டித்து தலைநகர் கெய்ரோவில் கடந்த 2 நாட்களாக ராணுவத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது உள்துறை அமைச்சக கட்டிடம் மற்றும் போலீஸ் நிலையம் சூறையாடப்பட்டது. பல இடங்களில் தீவைப்பு சம்பவம் நடந்தது. இதை ஒடுக்க போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் பலியானார்கள். இதற்கிடையில் உள்துறை அமைச்சக கட்டிடம் அருகே நடைபெற்ற வன்முறையில் போராட்டக்காரர் ஒருவரும், போலீஸ்காரர் ஒருவரும் இறந்தனர். கடந்த 2 நாட்கள் நடந்த மோதல்களில் 1,000 பேர் படுகாயம் அடைந்தனர். 4.2.2012 5.40 PM
முடிவடைந்தது சட்டசபை கூட்டம்: தேதி குறிப்பிடாமால் ஒத்திவைத்தார் சபாநாயகர்

சென்னை, பிப்.5-

சட்டப்பேரவையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதில் உரையாற்றினார். முதல்-அமைச்சரின் உரைக்கு அனைத்துக்கட்சியினர் பாராட்டு தெரிவித்து பேசினர். அதைத்தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் சட்டசபை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் டி.ஜெயக்குமார் அறிவித்தார். 4.2.2012 3.42 PM

கூடங்குளம் அணு உலை அச்ச உணர்வு குறித்து அறிய தமிழக வல்லுனர் குழு அமைக்கப்படும் : ஜெயலலிதா

சென்னை, பிப். 4-

சட்டசபையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:- கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்தும்; அப்பகுதி மக்களிடையே இது குறித்து தற்போது நிலவி வரும் எண்ணங்கள் மற்றும் அச்ச உணர்வுகள் குறித்தும் அறிந்து; மாநில அரசுக்கு அறிக்கை அளிக்கும் வகையில், மாநில அரசால் ஒரு வல்லுநர் குழு உடனடியாக நியமிக்கப்படும். இந்தக் குழு தனது அறிக்கையை அரசுக்கு விரைந்து அளிக்கும். இந்த வல்லுநர் குழு அறிக்கையின் அடிப்படையில், மாநில அரசு மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்.4.2.2012 3.10 PM

தானே புயல் பாதிப்பு கடலூர்- விழுப்புர மாவட்ட விவசாயிகளின் நிலவரி ரத்து : ஜெயலலிதா உத்தரவு
சென்னை, பிப். 4-

சட்டசபையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:- தானே புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் புயல் பாதித்த மாவட்டங்கள் என அறிவிக்கப்படும். இதன் மூலம், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் நிலவரி முழுவதுமாக ரத்து செய்யப்படும். மேலும், கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று நிலுவையில் உள்ள 440 கோடியே 11 லட்சம் ரூபாய் அளவிலான விவசாயிகளின் குறுகிய கால கடன் மத்திய கால கடனாகவும்; மத்திய கால கடன் நீண்ட கால கடனாகவும் மாற்றப்பட்டு, விவசாயிகளுக்கு புதிய பயிர்க் கடன்கள் வழங்கப்படும். இந்த நடவடிக்கையின் மூலம் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் விவசாயிகள் பயன் பெறுவர். இவாறு அவர் கூறினார். 4.2.2012 2.55 PM
அதிக ஆதாரங்களுடன் ஐகோர்ட்டில் அப்பீல் செய்வேன் : சுப்பிரமணிய சுவாமி
புதுடெல்லி பிப் 4-

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை. குற்றவாளியாக சேர்த்து விசாரிக்க முடியாது என சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு குறித்து சுப்பிரமணிய சுவாமி கோர்ட் வளாகக்தில் நிருபர்களிடம் இந்த தீர்ப்பு நான் எதிர்பார்க்காதது. ஆனால் நான் கவலைப்படவில்லை. இன்னும் அதிகமான ஆதாரங்களுடன் நான் டெல்லி ஐகோர்ட்டை நாடுவேன். நேரடியாக சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வது பற்றியும் ஆலோசித்து வருகிறேன் என்று கூறினார்.4.2.2012 1.50 PM

2 ஜி வழக்கில் ப.சிதம்பரத்தையும் சேர்க்க கோரிய சுப்பிரமணிய சுவாமி மனு தள்ளுபடி
புதுடெல்லி பிப் 4-

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என்ற மனு மீதான தீர்ப்பை இன்று மதியம் அறிவிப்பதாக சி.பி.ஐ சிறப்பு நிதி நீதிமன்றம் கூறி இருந்தது. அதன்படி சுப்பிரமணிய சுவாமி கோர்ட்டுக்குள் அனுமதிக்கபட்டார். நீதிபதி ஓ.பி.சைனி ப.சிதம்பரத்தை குற்றவாளியாக சேர்த்து விசாரிக்க முடியாது என கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.4.2.2012 1.35 PM

தானே புயல் நிவாரண உதவி விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் மத்திய மந்திரி தகவல்
சென்னை பிப் 4-

சென்னையில் மந்திரி மந்திரி நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்வர் மத்திய அரசு நிதி வழங்காமல் பாரா முகமாக இருப்பதாக தெரிவித்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு சமமாகத்தான் பார்க்கிறது. அனைத்து மாநிலங்களையும் ஒன்றாக பாவித்து தேவையான நிதிகளை முறைப்படி வழங்கி வருகிறது. தமிழகத்தில் தானே புயல் தாக்கியவுடன் உடனடியாக ரூ.500 கோடியை இடைக்கால நிவாரணமாக மத்திய அரசு வழங்கியது. அதுமட்டுமின்றி மத்திய குழுவினரை அனுப்பி சேத மதிப்பீடுகள் கணக்கிடப்பட்டன. அந்த நிபுணர் குழு மத்திய அரசிடம் தனது அறிக்கையை கொடுத்துள்ளது. அந்த அறிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கபடும்.4.2.2012 12.45 PM
சட்டசபையிலிருந்து தி.மு.க உறுப்பினர்கள் வெளியேற்றம்
சென்னை பிப்4

தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நடந்த விவாதத்துக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்து பேசினார். அப்போது தி.மு.க தலைவர் கருணாநிதி கூறபட்ட கருத்துக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்க தி.மு.க உறுப்பினர் துரைமுருகன் கோரினார். இதற்கு அனுமதி மறுக்கபட்டதால். தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். அப்போது அவர்கள் இருந்த பகுதி நோக்கி ஒரு புத்தகம் வந்து விழுந்தது. உடனே அங்கு நின்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புத்தகத்தை காட்டி ஏதோ கூறினார்கள். இதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் கூச்சல் ஏற்பட்டது. எனவே நின்று உத்தரவிட்டார் .உடனே தி.மு.க உறுப்பினர்கள் வெளி யேற்றபட்டனர். 4.2.2012 12.20 PM
சென்னை சூப்பர் கிங்ஸ் ரவீந்திர ஜடேஜாவை ரூ.9.72 கோடிக்கு ஏலம் எடுத்தது
பெங்களூர் பிப் 4-

5-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி 144 வீரர்கள் இன்று ஏலம் விடப்பட்டார்கள்.ஏலப்பட்டியலில் 8 இந்திய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இதில் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு தான் பலத்த கிராக்கி நிலவியது. கடந்த முறை கொச்சி அணி அவரை ரூ.4.75 கோடிக்கு வாங்கி இருந்தது. அவரது தொடக்க விலையான ரூ.50 லட்சத்தில் இருந்து இன்று ஐ.பி.எல் அணி உரிமையாளர்கள் ஏலம் கேட்டார்கள். ஏலத்தில் ரவீந்திர ஜடேஜாவை சென்னை சூப்பர் கிங்ஸ், ரூ.9.72 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஆஸ்திரேலிய வீரர் மெக்கல்லத்தை கொல்கத்தா கினைட் ரைடர் ரூ. 4.14 கோடிக்கு ஏலம் எடுத்தது.
மற்ற வீரரர்கள் விவரம:
ஜெயவர்த்தனே -ரூ . 6.86 கோடி -டெல்லி டேர்டெவில
முரளிதரன் -ரூ. 1.7 கோடி -பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
கிப்ஸ்- ரூ.24 லட்சம் -மும்பை இந்தியன் அணி
இந்திய வீரர் வி.வி.எஸ்.லட்சுமணனை யாரும் ஏலம் எடுக்கவில்லை
பார்தீவ் பட்டேல் ரூ 3.12 கோடி டெக்கான் சார்ஜ்
பிராட் ஹூட்ச் ரூ.2.28 கோடி ராஜஸ்தான் ராயல்
வினய் குமார் ரூ. 5 கோடி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
4.2.2012 11.35 AM

நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்-3 பேர் பலி
பள்ளிபாளையம் பிப் 4-

பள்ளிப்பாளையத்தை அடுத்த சின்னாரபாளையம் அருகே 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் மூர்த்தி, நாகராஜ், குழந்தைவேல் ஆகிய 3 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். இந்த விபத்து குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 4.2.2012 11.15 AM

திண்டிவனக்தில் அ.தி.மு.க-தே.மு.தி.க.வினரிடையே மோதல்
திண்டிவ்னம் பிப் 4-

திண்டிவனம் காந்திசிலை அருகே கார்ட்டூன் படத்துடன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை விமர்சித்து அ.தி.மு.க. சார்பில் ஒரு பேனர் வைக்கப்பட்டது. இதைதொடர்ந்து தே.மு.தி.க.வினர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்து அதே பகுதியில் மற்றொரு பேனரை வைத்தனர். இதனால் இருதரப்பினர் இடையே மோதல் உருவானது. இதில் பலர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து அங்கு போலீஸ் குவிக்கபட்டு உள்ளது அ.தி.மு.க.-தே.மு.தி.க.வினர் மோதலால் திண்டிவனத்தில் பதட்டம் நிலவி வருகிறது. 4.2.2012 11.10 AM

கிரிக்கெட் ஸ்பான்சரரில் இருந்து சகாரா நிறுவனம் விலகல்
புதுடெல்லி, பிப். 4 -

இந்திய கிரிக்கெட் அணிக்கு அளித்து வந்த ஸ்பான்சரரை விலக்கிக் கொள்வதாகவும், ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் புனே வாரியர்ஸ் அணியின் உரிமையையும் திரும்ப ஒப்படைக்க உள்ளதாக சகாரா இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.ஆக்கி மற்றும் பார்முலா ஒபன் கார் பந்தயம் ஆகியவற்றிற்கும் சகாரா நிறுவனம் ஸ்பான்சராக இருப்பது குறிப்பிடதக்கது. 4.2.2012 11.00 AM

சிரியாவில் போரட்டகாரர்கள் மீது துப்பாக்கி சூடு 220 பேர் பலி
டாமாஸ்காஸ் பிப் 4-

சிரியாவில் அதிபர் பாஷர் அல்-ஆசாத் ஆட்சிக்கு எதிராக பொது மக்கள் அடிக்கடி போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று ஹோம்ஸ் நகரில் பொதுமக்கள் திரண்டு போரட்டம் நடத்தினர் . இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இச்சம்பவத்தில் 220 பேர் பலியானார்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கபட்டு உள்ளனர். 4.2.2012 10.25 AM

2ஜி வழக்கில் ப.சிதமபரத்தை சேர்க்க கோரிய மனு: இன்று பிற்பகல் 2 மணிக்கு தீர்ப்பு
புதுடெல்லி பிப் 4-

2 ஜி ஸ்பெக்ட்ரம் உள்துறை அமைச்சர் ப.சிதமபரத்தையும் சேர்க்க உத்தரவிடக்கோரி சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிதம்பரத்தை விசாரிக்க வேண்டுமா என்பதை சி.பி.ஐ., கோர்ட்டே முடிவு செய்யும் என, உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் எனக்கோரி, சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் இன்று வழங்குகிறது.இதனால் இன்று காலை முதல் டெல்லி கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது அனைவரும் காலையிலேயே தீர்ப்பு வரும் என எதிர்பார்த்து இருந்தனர். ஆனல் மனுதாரர் என்ற முறையில் சுப்பிரமணீய சுவாமிக்கு பிற்பகல் 2 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என தகவல் தெரிவிக்கபட்டு உள்ளது. 4.2.2012 10.13 AM