கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு


கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 15 Jan 2017 11:56 PM GMT (Updated: 15 Jan 2017 11:56 PM GMT)

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

செங்குன்றம்

தண்ணீர் திறப்பு

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் ஏரிக்கு திறந்துவிடுவது வழக்கம். அதன் பேரில் கடந்த நவம்பர் மாதம் 21-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் டிசம்பர் மாதம் 11-ந் தேதி நிறுத்தப்பட்டது. நவம்பர் மாதம் 21-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 11-ந் தேதி வரை 0.99 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு கிடைத்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை பொய்த்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர். இதனை ஏற்று கடந்த 9-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கூடுதல் தண்ணீர்

அதன் பின்னர் கூடுதலாக வினாடிக்கு 180 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வியாழக்கிழமை விஜயவாடா சென்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார். சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிராதான ஏரிகளில் இருப்பில் உள்ள தண்ணீரை கொண்டு சென்னையில் ஒரு மாதம் வரைதான் குடிநீர் வழங்க முடியும். இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு குறைந்தது 5 டி.எம்.சி. தண்ணீரை திறந்து திறந்து விடும்படி கேட்டுக்கொண்டார். கண்டலேறு அணையில் தற்போது தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளதால் முடிந்த வரை கூடுதலாக தண்ணீர் திறந்து விட முயற்சி செய்கிறோம் என்று சந்திரபாபு நாயுடு உறுதி அளித்தார்.

அதன் பேரில் தற்போது கூடுதலாக 520 கனஅடி தண்ணீர் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதாவது தற்போது மொத்தம் வினாடிக்கு 1,700 கனஅடி வீதம் தண்ண்ீர் திறக்கபடுகிறது. இந்த தண்ணீர் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கண்டலேறு அணையில் இருந்து 137-வது கிலோ மீட்டர் தூரத் தில் வந்து கொண்டிருந்தது.

இன்று வந்தடையும்

கண்டலேறு- பூண்டி இடையேயான தூரம் 177 கிலோமீட்டர். இதில் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்ட் - பூண்டி இடையேயான தூரம் 25 கிலோ மீட்டர். அதன்படி கிருஷ்ணா நதி நீர் ஜீரோ பாயிண்டில் இருந்து 15-வது கிலோமீட்டர் தொலைவில் வந்து கொண்டிருந்தது. இந்த தண்ணீர் இன்று (திங்கட்கிழமை) தமிழக எல்லையை வந்தடையும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி பூண்டி ஏரியில் நீர் மட்டம் 22.88 அடியாக பதிவானது. 563 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து மெட்ரோ வாட்டர் போர்டுக்கு பேபி கால்வாயில் 20 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 

Next Story