கேட் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது மத்திய அரசு நிறுவனங்களில் என்ஜினீயர்களுக்கு வேலை வாய்ப்பு


கேட் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது மத்திய அரசு நிறுவனங்களில் என்ஜினீயர்களுக்கு வேலை வாய்ப்பு
x
தினத்தந்தி 16 Jan 2017 7:17 AM GMT (Updated: 16 Jan 2017 7:17 AM GMT)

மத்திய அரசு நிறுவனங்களில் கேட் தேர்வின் அடிப்படையில் என்ஜினீயர்களுக்கான பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மொத்தம் 193 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

என்ஜினீயரிங் பட்டதாரிகளை முதுநிலை படிப்புகளில் சேர்ப்பதற்காக கேட் தேர்வு நடத்தப்படுகிறது. பல்வேறு மத்திய அரசு நிறுவனங்களும், சில தனியார் நிறுவனங்களும் கேட் தேர்வின் அடிப்படையில் பணி நியமனம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன. கேட்-2017 தேர்வு அறிவிக்கப்பட்டதில் இருந்தே இதற்கான அறிவிப்புகள் வெளியான வண்ணம் இருந்தன. பல மத்திய அரசு நிறுவனங்கள் அறிவித்த காலியிடங்களுக்கான விண்ணப்ப அவகாச காலம் தற்போது தொடங்கி உள்ளன. விண்ணப்பிக்க அவகாசம் உள்ள சில நிறுவனங் களின் பணி அறிவிப்புகளை இனி பார்க்கலாம்...

கெயில் :

இந்திய கியாஸ் ஆணைய நிறுவனமான கெயில் (GAIL) கேட் தேர்வின் அடிப்படையில் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்களை நிரப்புகிறது. மொத்தம் 73 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணிப்பிரிவு வாரியாக கெமிக்கல் - 23, மெக்கானிக்கல்-15, எலக்ட்ரிக்கல் - 15, இன்ஸ்ட்ருமென்டேசன் - 10, சிவில் - 5, பிசினஸ் இன்பர்மேசன் சிஸ்டம் - 5 இடங்கள் உள்ளன.

பணியிடங்கள் உள்ள பிரிவுகள் சார்ந்த பி.இ., பி.டெக் பட்டப்படிப்புகளை குறைந்தபட்சம் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 20-1-2017-ந் தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கேட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் தேர்வுக்கு அழைக்கப்பட்டு குழு கலந்துரையாடல், நேர்காணல் ஆகிய தேர்வு முறைக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விருப்பம் உள்ளவர்கள்
www.gailonline.com
என்ற இணையதளம் வழியாக 17-2-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள முகவரியில் பார்க்கலாம்.

என்.டி.பி.சி. :

தேசிய அனல்மின் நிறுவனமான என்.டி.பி.சி. கேட் தேர்வின் அடிப்படையில் ‘என்ஜினீயரிங் எக்சிகியூட்டிவ் டிரெயினி’ பணியிடங்களை நிரப்புகிறது. மொத்தம் 120 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். பிரிவு வாரியாக எலக்ட்ரிக்கல் - 40, மெக்கானிக்கல் - 50, சிவில் - 10, எலக்ட்ரானிக்ஸ் - 10, இன்ஸ்ட்ருமென்டேசன் - 10 இடங்கள் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 31-1-2017-ந் தேதியில் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பணியிடங்கள் சார்பான பி.இ., பி.டெக் படித்து கேட் - 2017 தேர்வு எழுத வேண்டும். அதில் பெறும் மதிப்பெண் களின் அடிப்படையில் தகுதியானவர்கள் குழு கலந்துரையாடல், நேர்காணலில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் பெறலாம்.

விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 31-1-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.ntpccareers.net என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.

Next Story