இப்போது நடப்பது ஜல்லிக்கட்டு அல்ல; கண்டன அறப்போராட்டம் தான் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


இப்போது நடப்பது ஜல்லிக்கட்டு அல்ல; கண்டன அறப்போராட்டம் தான் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 16 Jan 2017 10:45 PM GMT (Updated: 16 Jan 2017 9:40 PM GMT)

தமிழகத்தில் இப்போது நடப்பது ஜல்லிக்கட்டு அல்ல, இது தடையை கண்டித்து நடைபெறும் அறப்போராட்டம் தான் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:– ஜல்லிக்கட்டு அல்ல ஆந

ஆலந்தூர்

தமிழகத்தில் இப்போது நடப்பது ஜல்லிக்கட்டு அல்ல, இது தடையை கண்டித்து நடைபெறும் அறப்போராட்டம் தான் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–

ஜல்லிக்கட்டு அல்ல

ஆந்திர மாநிலத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்பட்டு இருந்தது அம்மாநில அரசின் நிலைப்பாடு. தமிழகத்தில் உச்சநீதிமன்றத்தின் தடை காரணமாக தடுக்கப்பட்டது என்றால் அது இந்த மாநில அரசாங்கத்தின் நிலைப்பாடு. இதில் சொல்வதற்கு எதுவும் இல்லை. தமிழர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். இது ஒருவகையான போராட்டம்.

தமிழகத்தில் இப்போது நடந்து இருப்பது ஜல்லிக்கட்டு விளையாட்டு அல்ல. ஜல்லிக்கட்டு முறைப்படி நடப்பது என்றால் வாடிவாசலில் இருந்து அரசு அதிகாரிகள் முழுமையாக காளைகளை ஆய்வு செய்து வீரர்களை ஆய்வு செய்து அதற்கு பின் அனுமதிப்பார்கள். இப்போது தடை செய்யப்பட்ட காரணத்தினால் எழுந்த கோபத்தின் காரணமாக உணர்ச்சி வெளிப்பாட்டின் காரணமாக இது நடந்துள்ளது.

அறப்போராட்டம் தான்

பீட்டா போன்ற அமைப்புகள் இந்திய கலாசாரத்தை ஒழிக்க வேண்டும். இந்திய உயிரினங்களை ஒழிக்க வேண்டும். பாரம்பரியத்தையே ஒழிக்க வேண்டும் என திட்டமிட்டு செயல்படுகின்றனர். பீட்டா போன்ற அமைப்புகள் இப்போது வெளியான புகைப்படங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து மிருகங்கள் வதைக்கப்படுகின்றன என கூறி தடையை உறுதி செய்கின்ற வாய்ப்பு உள்ளது.

உச்சநீதிமன்றமோ மற்ற அமைப்புகளோ எந்த காரணம் கொண்டும் இப்போது வெளியான புகைப்படங்களை ஜல்லிக்கட்டுடன் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது. இது ஒரு போராட்டம் தான், ஒரு வகையில் அறப்போராட்டம். ஜல்லிக்கட்டுக்கு எதிராக அறப்போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

காங்கிரஸ், தி.மு.க.வே காரணம்

இதை சொல்வதால் என்னை என்ன வேண்டுமென்றாலும் விமர்சனம் செய்யட்டும். என் தமிழ் சமுதாயம், நான் பிறந்த மண், என்னுடைய மக்கள், என்னுடைய பாரம்பரியம். இதற்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இது பாரதீய ஜனதா கட்சியாலோ, இப்போதுள்ள அரசாங்கத்தினாலோ ஏற்படவில்லை. இதற்கு காங்கிரஸ், தி.மு.க. செய்த துரோகம், அவர்கள் ஆட்சிக்காலத்தில் செய்த துரோகம். அதை சரிசெய்யக்கூடிய காரியங்களில் ஈடுபட்டு வருகிறோம். தொடர்ந்து மேற்கொள்வோம்.

கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றுத் தந்தோமா, இல்லையா? அதற்கு தடை வாங்கியது யார்? அந்த தடைக்கு மேலாக காங்கிரஸ், தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்ன முயற்சி எடுத்தார்கள். கடந்த ஒரு ஆண்டாக எதுவுமே செய்யவில்லை. இப்போது எல்லோரும் போராட்டம் நடத்துகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story