கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி வேலூரில் இளைஞர்கள், இளம்பெண்கள் போராட்டம்


கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி வேலூரில் இளைஞர்கள், இளம்பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 17 Jan 2017 11:15 PM GMT (Updated: 17 Jan 2017 8:36 PM GMT)

வேலூரில் 500–க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 10 பெண்கள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்,

ஜல்லிக்கட்டு


தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, மாடுவிடும் விழா போன்ற விளையாட்டுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் அண்ணாசாலையில் இளைஞர்கள் சார்பில் மாபெரும் போராட்டம் மற்றும் ஊர்வலம் நடந்தது. இதனால் வேலூரில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதைத்தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி வேலூர் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் தடையை மீறி மாடு விடும் விழா நடந்தது.

போராட்டம்


இந்த நிலையில் நேற்று முன்தினம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று ஏராளமான இளைஞர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது போராட்டம் நேற்று காலை வரை நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.

அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும், ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரியும், பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்கக்கோரியும் வேலூர் அண்ணாசாலையில் அண்ணா கலையரங்கம் அருகே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 500–க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள், வேலூர் மாவட்ட எருது விடும் விழா பாதுகாப்பு சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் மதியம் சுமார் 1 மணியளவில் தொடங்கியது.

100 பேர் கைது


அந்தப் பகுதியில் ஏதாவது அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அறிவழகன், ரஜினிகாந்த், அலமேலு மற்றும் ஏராளமான போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டோர் தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

மாலை 4.45 மணிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், உதவி போலீஸ் சூப்பிரண்டுகள் உமாசங்கர், பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படவில்லை.

இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் 10 பெண்கள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்து 4 போலீஸ் பஸ்களில் ஏற்றி வேலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அடைத்தனர். போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டதும் மற்றவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story