ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு பன்னீர்செல்வம் மட்டும் தான் முன்னாள் அமைச்சர் தாமோதரன் பேச்சு


ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு பன்னீர்செல்வம் மட்டும் தான் முன்னாள் அமைச்சர் தாமோதரன் பேச்சு
x
தினத்தந்தி 22 Feb 2017 10:45 PM GMT (Updated: 22 Feb 2017 8:16 PM GMT)

தொண்டர்கள் விரும்பும் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு பன்னீர் செல்வம் மட்டும் தான் என்று முன்னாள் அமைச்சர் தாமோதரன் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பிரிந்தனர். ஒரு தரப்பினர் சசிகலா அணியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளாகவும், மற்றொரு தரப்பினர் ஓ. பன்னீர் செல்வம் அணி ஆதரவாளர்களாகவும் மாறினார்கள். இதற்கிடையே ஒரு தரப்பினர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் ஆதரவாளர்களாகவும் மாறினார்கள்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிணத்துக்கடவு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் வேளாண்மை துறை அமைச்சருமான செ.தாமோதரன் நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். தனது ஆதரவாளர்களுடன் உறுதுணையாக இருப்போம் என்று உறுதி அளித்தார்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பிய செ.தாமோதரன் தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை கூட்டத்தை தனது வீட்டில் நடத்தினார். பொள்ளாச்சி அருகே நல்லிகவுண்டன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பொள்ளாச்சி மேற்கு, கிணத்துக்கடவு ஒன்றிய அ.தி.மு.க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் பேசியதாவது:-

அரசியல் வாரிசு பன்னீர்செல்வம் தான்

ஜெயலலிதாவின் கனவை நனவாக்கியது முன்னாள் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தான். அவர் வாழும் போதே தனக்கு நிகரான மாற்று முதல்வராக தலைமை ஏற்கும் தகுதி உடையவர் என்று முன்மொழியப்பட்டவர் பன்னீர்செல்வம் தான். அதன் அடிப்படையில் கழகத்தின் சோதனை ஏற்பட்ட காலங்களிலும் முன் நின்று அந்த சோதனைகளுக்கு எல்லாம் தோள் கொடுத்து சாதனை புரிந்தார்.

‘மக்களால் நான், மக்களுக்காக நான்’ என்ற ஜெயலலிதாவின் தாரக மந்திரத்திற்கு உயிர் பெறச்செய்வதில் உன்னத பணிகளை மேற்கொண்டவர். ஜெயலலிதா மறைந்த பிறகு முதல்வராக பொறுப்பேற்று சில நாட்களில் எழுந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காட்டியவர். ஒரு எளிய தொண்டனும் எட்டி சென்று பார்ப்பதற்கு இன்னும் தன்னை எளியவராக காட்டி கொண்டு இன்முகத்தோடு பணியாற்றிய பன்னீர்செல்வம் தான் ஜெயலலிதா கண்ட எக்கு கோட்டையின் பாதுகாவலன்.

இன்னும் பல நூற்றாண்டுகள் அ.தி.மு.க கழகத்தை வளர்ப்பதில் வல்லமை படைத்தவராக பன்னீர் செல்வம் மட்டுமே உள்ளார். தொண்டர்கள் விரும்பும் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு பன்னீர் செல்வம் மட்டும்தான். அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் மயில்சாமி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராஜமாணிக்கம், அ.தி.மு.க. முன்னாள் நகர செயலாளர்கள் கிரி, செந்தில்குமார், கண்ணப்பன், ரத்தினகுமார் உள்பட கிளை கழக, ஊராட்சி கழக, ஒன்றிய, மாவட்ட அளவிலான அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story