பாடியில் பட்டப்பகலில் துணிகரம்: கட்டிட காண்டிராக்டர் காரில் இருந்த ரூ.2¾ லட்சம் திருட்டு


பாடியில் பட்டப்பகலில் துணிகரம்: கட்டிட காண்டிராக்டர் காரில் இருந்த ரூ.2¾ லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 21 March 2017 11:05 PM GMT (Updated: 21 March 2017 11:04 PM GMT)

பாடியில் கட்டிட காண்டிராக்டர் காரில் இருந்த ரூ.2¾ லட்சத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆவடி,

சென்னை அண்ணாநகர் கிழக்கு, ஆர்.வி.நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 63). கட்டிட காண்டிராக்டர். இவர் அம்பத்தூரை அடுத்த பாடி பார்க் ரோட்டில் ஒருவருக்கு காண்டிராக்ட் அடிப்படையில் புதிய வீடு கட்டிக்கொடுக்கும் பணியில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் அவர் நேற்று நண்பகல் அந்த வீட்டின் கட்டுமானப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கெடுப்பதற்காக தனது காரில் அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் வங்கிக்கு சென்று ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் எடுத்தார்.

பின்பு பாடியில் கட்டிட பணி நடக்கும் இடத்துக்கு சென்ற அவர் காரை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு கட்டிடத்துக்குள் சென்றார். அப்போது அவர் பணத்தை கார் டிரைவர் இருக்கையில் வைத்து விட்டு சென்றதாக தெரிகிறது.

ரூ.2¾ லட்சம் திருட்டு

பின்பு திரும்பி வந்தபோது காரின் கதவு திறந்து கிடந்தது கண்டும், அதில் சிறிய துளை ஒன்று போடப்பட்டு இருப்பது கண்டும் அதிர்ச்சி அடைந்தார். மேலும், காரின் உள்ளே பார்த்தபோது அதில் இருந்த ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரியவந்தது.

காரின் கதவில் துளைபோட்ட மர்மநபர்கள் அதன் மூலம் கையை விட்டு கார் கதவை திறந்து பணத்தை திருடிச்சென்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து சேகர் கொரட்டூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story