விருகம்பாக்கத்தில் கார் திருடிய 2 பேர் கைது


விருகம்பாக்கத்தில் கார் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 April 2017 9:30 PM GMT (Updated: 24 April 2017 7:23 PM GMT)

விருகம்பாக்கத்தில் கார் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

விருகம்பாக்கம், அருணாச்சலம் மெயின்ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கிரண் (வயது 30). தனியார் நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவர் சொந்தமாக கார் ஒன்று வைத்திருந்தார். சமீபத்தில் இந்த காரின் சாவி தொலைந்து போனது. எனவே அந்த கார் நீண்ட நாட்களாக அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த 20–தேதி அன்று அந்த கார் திடீரென காணாமல் போனது. இதுகுறித்து கிரண் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்ததார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.  

இதில் 2 வாலிபர்கள் அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்து அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த கிரணின் காரை எடுத்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த வாலிபர்களின் உருவங்களை கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

2 வாலிபர்கள் கைது

 அதில், காரை திருடியவர்கள் மயிலாடுதுறையை சேர்ந்த முகமது ஆசான் (29), அவரது நண்பர் புதுச்சேரியை சேர்ந்த பால்ராஜ் (36), என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இவர்களது நண்பர் ஒருவர் உள்ளார். அவரை பார்க்க 2 பேரும் வந்தபோது ஒரு காரின் சாவி கிடைத்து உள்ளது. அது எந்த வண்டியின் சாவி என்று பார்த்துவிட்டு இறுதியில் அவர்கள் கிரணின் காரை திருடி சென்று உள்ளனர்’’ என கூறினர்.   

இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து காரை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் 2 பேரும் வேறு எங்காவது இதுபோன்று கார் திருடும் சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனரா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Next Story