ஓடும் ரெயிலில், கழிவறை சென்ற பெண்ணுக்கு பிரசவம் தண்டவாளத்தில் விழுந்து குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்


ஓடும் ரெயிலில், கழிவறை சென்ற பெண்ணுக்கு பிரசவம் தண்டவாளத்தில் விழுந்து குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
x
தினத்தந்தி 26 April 2017 10:45 PM GMT (Updated: 26 April 2017 9:34 PM GMT)

ஓடும் ரெயிலில், கழிவறை சென்ற பெண்ணுக்கு பிரசவம் ஏற்பட்டது. இதில், குழந்தை கழிவறை கோப்பையின் ஓட்டை வழியாக தண்டவாளத்தில் விழுந்து உயிர் பிழைத்த அதிசயம் நடந்துள்ளது.

மும்பை,

ஓடும் ரெயிலில், கழிவறை சென்ற பெண்ணுக்கு பிரசவம் ஏற்பட்டது. இதில், குழந்தை கழிவறை கோப்பையின் ஓட்டை வழியாக தண்டவாளத்தில் விழுந்து உயிர் பிழைத்த அதிசயம் நடந்துள்ளது.

கழிவறையில் பிரசவம்

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் சந்தனா(வயது26). இவர், கணவருடன் ரத்னகிரியில் வசித்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியான சந்தனா பிரசவத்திற்காக மும்பையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார். இதையடுத்து அவர் நேற்று முன்தினம் ரத்னகிரியில் இருந்து மும்பை செல்லும் ரத்னகிரி– தாதர் பாசஞ்சர் ரெயிலில் புறப்பட்டார்.

ரெயில் ரோகா தாண்டி காசு அருகே வந்தபோது, சந்தனா கழிவறைக்கு சென்றார். அப்போது அவருக்கு திடீரென பிரசவ வலி உண்டானது. இதில், கழிவறையிலேயே அவருக்கு குழந்தை பிறந்தது. துரதிருஷ்டவசமாக பிறந்த குழந்தை கழிவறை கோப்பையின் ஓட்டை வழியாக ஓடும் ரெயிலில் இருந்து தண்டவாளத்தில் விழுந்தது.

குழந்தை உயிருடன் மீட்பு

இதனால் பதறிப்போன சந்தனா வலியை பொறுத்துக்கொண்டு கழிவறையை விட்டு வெளியே வந்து, நடந்த சம்பவத்தை பயணிகளிடம் கூறி குழந்தையை காப்பாற்றும்படி கதறி அழுதார். உடனடியாக பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். இதனையடுத்து ரெயில் குழந்தை விழுந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் தாண்டி நின்றது. இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகள் குழந்தையை தேடி தண்டவாளத்தில் ஓடினர். அப்போது தண்டவாளத்தில் சிறு காயங்களுடன் கதறி அழுதபடி குழந்தை கிடந்தது. இதையடுத்து அவர்கள் குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே ரெயில் காசு ரெயில்நிலையம் வந்தவுடன் அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சில் தாயும், சேயும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், சந்தனாவுக்கு பிறந்தது ஆண் குழந்தை ஆகும்.

ஓடும் ரெயிலில் இருந்து விழுந்து குழந்தை உயிர் பிழைத்த அதிசய சம்பவம் ரெயில் பயணிகள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story