சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.28 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது


சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.28 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது
x
தினத்தந்தி 23 Jun 2017 11:00 PM GMT (Updated: 23 Jun 2017 7:20 PM GMT)

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.28 லட்சம் மதிப்பு உள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஒரு விமானம் செல்ல இருந்தது. அதில் பெருமளவில் வெளிநாட்டு பணம் கடத்தப்பட இருப்பதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த விமானத்தில் ஏற வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னையை சேர்ந்த முகமது இஸ்மாயில் (வயது 34) என்பவர் சுற்றுலா விசாவில் சிங்கப்பூருக்கு செல்ல வந்து இருந்தார்.

வெளிநாட்டு பணம்

அவரிடம் இருந்த சூட்கேஸ் மற்றும் பையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் துணிகளுக்கு இடையே அமெரிக்க டாலர்கள் உள்பட வெளிநாட்டு பணத்தை மறைத்து வைத்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.28 லட்சம் மதிப்பு உள்ள வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து முகமது இஸ்மாயிலின் விமான பயணத்தை ரத்து செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிநாட்டு பணத்தை சிங்கப்பூருக்கு கடத்தி சென்று கொடுத்தால் விமான டிக்கெட் மற்றும் செலவுகள் போக ரூ.10 ஆயிரம் தருவார்கள் என்பதால் அவற்றை கொண்டு சென்றதாக அதிகாரிகளிடம் முகமது இஸ்மாயில் தெரிவித்தார். மேலும் அவரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story