மாநகர பஸ் மோதி பெண் சாவு டிரைவர் கைது


மாநகர பஸ் மோதி பெண் சாவு டிரைவர் கைது
x
தினத்தந்தி 23 Jun 2017 11:00 PM GMT (Updated: 23 Jun 2017 7:27 PM GMT)

சாலையை கடக்க முயன்றபோது மாநகர பஸ் மோதி பெண் பலியானார். விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி அயோத்தியா நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி அம்முரதி (வயது 45). இவர்களுக்கு அர்ச்சயா(12) என்ற ஒரு மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் மகள் அர்ச்சயா அம்முரதியுடன் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணியளவில் அம்முரதி சேப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மகளை விட்டுவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். டாக்டர் பெசன்ட் சாலையை கடக்க முயன்றபோது அண்ணாசதுக்கத்தில் இருந்து கே.கே.நகர் நோக்கி சென்று கொண்டிருந்த மாநகர பஸ் (தடம் எண்:12ஜி) எதிர்பாராவிதமாக அம்முரதி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

டிரைவர் கைது

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அம்முரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்திய மாநகர பஸ் டிரைவர் கிண்டி ராஜ்பவன் காலனியை சேர்ந்த குமார்(43) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story