மேடை பாடகியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது


மேடை பாடகியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 23 Jun 2017 11:40 PM GMT (Updated: 23 Jun 2017 11:39 PM GMT)

3-வது திருமணத்துக்காக மேடை பாடகியான சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நித்திரவிளை,

நித்திரவிளை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, ஒரு இசை குழுவில் மேடைப்பாடகியாக உள்ளார். இதனால் அந்த சிறுமி பல்வேறு இடங்களுக்கு சென்று இசைநிகழ்ச்சிகளில் பாடிவந்தார்.

அதன்படி கடந்த 5-ந் தேதி ஒரு இசைநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற சிறுமி, வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் சிறுமியை பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. அவரது தாயார் நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தார்.

திருமணமானவர்

இந்தநிலையில் அந்த சிறுமி ஒரு வாலிபருடன் நாகர்கோவில் பகுதியில் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுமியையும், வாலிபரையும் பிடித்து நித்திரவிளை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அந்த வாலிபர் களியக்காவிளை ஆர்.சி. தெருவைச் சேர்ந்த ஸ்டாலின் (29) என்பதும், அவர் இசைக்குழுவில் நடனம் ஆடியும், நடன பயிற்சி அளித்து வந்ததும் தெரிய வந்தது. சிறுமி இசைக்குழுவில் பாடவந்தபோது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, ஸ்டாலின் காதல் வலையில் விழுந்தார். பின்னர், சிறுமியிடம் ஸ்டாலின் ஆசைவார்த்தைகள் கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும், ஸ்டாலினுக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்துள்ளது. முதல் மனைவிக்கு ஒரு குழந்தையை கொடுத்துவிட்டு கைகழுவி விட்டுள்ளார். பின்னர், 2-வது ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். தற்போது அவருக்கு 3 மாத குழந்தை உள்ளது.

3-வது காதல் வலை

இந்தநிலையில் 3-வது திருமணத்திற்காக பாடகியான சிறுமியை காதல் வலையில் ஸ்டாலின் வீழ்த்தி அழைத்துச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. உடனே போலீசார் ஸ்டாலினை கைது செய்து அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

3-வது திருமணத்துக்காக சிறுமியை ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story