மாதவரத்தில் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த பிரபல ரவுடி கைது


மாதவரத்தில் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த பிரபல ரவுடி கைது
x
தினத்தந்தி 24 Jun 2017 11:15 PM GMT (Updated: 24 Jun 2017 6:10 PM GMT)

மாதவரத்தில் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றம், 

சென்னை ஓட்டேரி திரு.வி.க. தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் என்ற ராஜேஷ் கண்ணா(வயது 30). பிரபல ரவுடி. இவர், மாதவரம் தணிகாசலம் நகர், 2–வது குறுக்குத் தெருவில் தனது கள்ளக்காதலியுடன் தங்கி இருப்பதாக மாதவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து மாதவரம் உதவி கமி‌ஷனர் ஜெயசுப்பிரமணி, இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் நேற்று மதியம் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அங்கு தனது கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த ரவுடி ராஜேஷை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். 

அந்த வீட்டில் இருந்து ஒரு அரிவாள், 2 கத்திகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 

கதிரவன் கொலையில் தொடர்பு

பின்னர், ரவுடி ராஜேஷை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில், ராஜேஷ், கடந்த 2013–ம் ஆண்டு காஞ்சீபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கதிரவன் என்ற பிரபல ரவுடி சென்னை கே.கே.நகரில் கொலை செய்யப்பட்ட வழக் கில் தொடர்புடைய குற்றவாளி என்பது தெரிய வந்தது.

அத்துடன், கடந்த 2012–ம் ஆண்டு மே மாதம் செங்குன்றத்தில் சென்னை தண்டையார்பேட்டை வினோபா நகர், 5–வது தெருவைச் சேர்ந்த பிரபல ரவுடி பள்ளு சேகர் என்பவரை கொலை செய்த வழக்கிலும் முக்கிய குற்றவாளி என்பதும், மேலும் அவர் மீது 5–க்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழக்குகள், வழிப்பறி வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. 

கள்ளக்காதல்

ராஜேஷ், ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து விட்டார். அதன்பிறகு சென்னை மாதவரம் பால்பண்ணையை அடுத்த சேலைவாயல் பகுதியை சேர்ந்த ஒருவருடைய மனைவியுடன் ராஜேஷுக்கு பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது.

தனது கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருப்பதற்காகவே மாதவரம் தணிகாசலம் நகரில் உள்ள இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து உள்ளார். கள்ளக்காதலியின் கணவர் வேலைக்கும், அவரது பிள்ளை கள் பள்ளிக்கூடத்துக்கும் சென்ற பிறகு ராஜேஷ் தனது கள்ளக்காதலியை மாதவரத்தில் உள்ள இந்த வீட்டுக்கு அழைத்து வந்து உல்லாசமாக இருப்பார்.

மாலையில் அந்த பெண், பள்ளிக்கு சென்று தனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்று விடுவார். இது தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த தகவல் அறிந்த போலீசார், நேற்று ரவுடி ராஜேஷை மடக்கி பிடித்து கைது செய்துவிட்டனர். 

சிறையில் அடைப்பு

கைதான ராஜேஷ் மீது மாதவரம் போலீசார் வழக்குப்
பதிவு செய்தனர். பின்னர் அவரை திருவொற்றியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

பட்டப்பகலில் மாதவரத்தில் கள்ளக்காதலியுடன் இருந்த ரவுடியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்த சம்பவம் அந்த பகுதியில் 
பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story