தமிழர்களின் வாழ்வை பறிக்கும் செம்மரங்கள்


தமிழர்களின் வாழ்வை பறிக்கும் செம்மரங்கள்
x
தினத்தந்தி 16 Aug 2017 8:06 AM GMT (Updated: 16 Aug 2017 8:06 AM GMT)

தமிழக, கர்நாடக மாநில அரசுகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன், சந்தன மரங்களையும், யானை தந்தங்களையும் வெட்டி கடத்தினான்.

மிழக, கர்நாடக மாநில அரசுகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன், சந்தன மரங்களையும், யானை தந்தங்களையும் வெட்டி கடத்தினான்.

தன்னை பிடிக்க வந்த அதிகாரிகள் பலரை இந்த உலகை விட்டே கடத்தினான்.

எப்படியோ ஒரு வழியாக வீரப்பன் கொல்லப்பட்ட பிறகு சந்தன மரம் கடத்தல் தடுக்கப்பட்டது.

தற்போது செம்மரங்களை வெட்டி கடத்தும் தொழில் கொடிகட்டி பறக்கிறது.

கோடி கோடியாய் கொட்டிக்கொடுக்கும் செம்மரங்கள் ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் நிறைந்துள்ளன. 87 ஆயிரம் ஏக்கரில் இந்த காடு அமைந்துள்ளது.

இந்தியாவில் செம்மரத்தின் மதிப்பு ஒரு டன் ரூ.25 லட்சமாகவும், சர்வதேச சந்தையில் ஒரு டன் ரூ.80 லட்சமாகவும் இருக்கிறது.

இந்த செம்மரங்கள் ஒருவகை மருந்து தயாரிக்கவும், அழகிய மரச்சாமான்கள் செய்யவும், கப்பல் கட்டுவதற்கும் பயன்படுகின்றன.

இதனால் வெளிநாடுகளில் செம்மரங்களுக்கு அதிக கிராக்கி உள்ளது. ஆனால் கடத்தல்காரர்களால் செம்மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுவதால், அவை அழிந்து வரும் இன பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதனால் செம்மரங்களை வெட்டவும், விற்கவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

ஆனால் இந்த மரங்களை திருட்டுத்தனமாக வெட்டி கடத்தி பணத்தை குவிப்பதை சிலர் தொழிலாக கொண்டுள்ளனர்.

கடத்தல்காரர்கள் நேரடியாக காட்டுக்குள் சென்று செம்மரங்களை வெட்டுவதோ, கடத்துவதோ கிடையாது. இவர்கள் இடைத்தரகர்களை வைத்து செம்மரம் வெட்டுவதற்கு கூலிக்கு ஆட்களை அழைத்து வந்து மரங்களை வெட்டி கடத்துகிறார்கள். இதற்கு பணத்தை அள்ளிவீசுகிறார்கள். இதனால் பணத்துக்கு ஆசைப்பட்டு மலைவாழ் இளைஞர்கள் செம்மரங்களை வெட்டுவதற்கும், தலைச்சுமையாக கடத்துவதற்கும் செல்கிறார்கள்.

அவர்கள் ஒருவர், இருவர் என்றில்லாமல் கும்பல் கும்பலாக செல்கிறார்கள். தமிழ்நாட்டை சேர்ந்த குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள், ஜவ்வாதுமலை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் செம்மரம் வெட்டும் தொழிலுக்கு செல்கிறார்கள்.

அவர்கள் கும்பலாக பஸ்களில் செல்லும்போது போலீசார் கண்டுபிடித்து அவர்களை கைது செய்துவிடுகிறார்கள்.

இதையும் மீறி ஆந்திர வனப்பகுதிக்கு செல்பவர்கள் அங்கு செம்மரங்களை வெட்டி கடத்தும்போது ஆந்திரமாநில வனத்துறையினரிடம் சிக்கி விடுகிறார்கள். இவ்வாறு கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஆந்திரமாநில சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த 2015-ம் ஆண்டு திருவண்ணாமலை மற்றும் தர்மபுரி பகுதிகளில் இருந்து செம்மரம் வெட்டி கடத்த சென்றதாக 20 தமிழர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றனர். அதற்கு முன்னதாக 5-க்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.

யாரும் ஆந்திர வனப்பகுதிக்கு செம்மரம் வெட்ட வரக்கூடாது என்று ஆந்திரமாநில போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனாலும் புரோக்கர்கள் அவர்களை ஆசைகாட்டி அழைத்து சென்றுவிடுகிறார்கள்.

செம்மரம் வெட்டி கடத்துவதற்காக செல்பவர்களின் வீட்டுக்கு தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்கிக்கொடுத்து அவர்களை அழைத்து செல்வதாக கூறப்படுகிறது.

மேலும் கட்டிட வேலைக்கு அழைத்து செல்வதாக கூறி செம்மரம் வெட்டுவதற்காக அழைத்து செல்லப்படுகிறார்கள். போதிய கல்வி அறிவு, விழிப்புணர்வு இல்லாததாலும், வேலைவாய்ப்பு இல்லாததாலும் அவர்கள் இதுபோன்ற குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதற்காக சென்று சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.

செம்மரம் வெட்ட செல்பவர்களுக்கு அங்கு நேரடியாக கூலி வழங்குவதில்லை. அவர்களுடைய வீடுகளுக்கு சென்று இடைத்தரகர்கள் பணத்தை வழங்கி வருகிறார்கள்.

தற்போது வீட்டுக்கு தேவையான பிரிட்ஜ், வாஷிங்மிஷின் போன்ற விலை உயர்ந்த பொருட்களை கொடுத்துவருவதாக கூறப்படுகிறது.

கூலிக்காக மரத்தை வெட்டிகடத்தும் அப்பாவி மக்கள் வனத்துறை மற்றும் போலீசாரிடம் சிக்கி வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி வருகிறார்கள். ஆனால் இவர்களை வைத்து கோடி, கோடியாய் சம்பாதிக்கும் கடத்தல் காரர்கள் எப்போதும் கோடீஸ்வரர் களாக சுகவாழ்க்கை வாழ்கிறார்கள்.

செம்மரம் வெட்டுவதற்காக செல்லும் அப்பாவி மக்கள் கைது செய்யப்படுவதையும், பலியாவதையும் தடுக்க அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

எங்கிருந்து அதிக தொழிலாளர்கள் செல்கிறார்கள்? எதற்காக அவர்கள் இந்த தொழிலை செய்கிறார்கள்? அவர்களுக்கு ஆசைவார்த்தை கூறி தூண்டில் போடுவது யார்? என்பதை கண்டறிய வேண்டும். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். அப்போதுதான் செம்மரம் வெட்ட செல்பவர்களை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், ஓரளவாவது குறைக்கலாம்.

- தி.மலை ராம்


Next Story