பனையூர் அருகே மரத்தில் கார் மோதி புது மாப்பிள்ளை பலி


பனையூர் அருகே மரத்தில் கார் மோதி புது மாப்பிள்ளை பலி
x
தினத்தந்தி 19 Aug 2017 10:15 PM GMT (Updated: 19 Aug 2017 7:35 PM GMT)

பனையூர் அருகே, சாலையோர மரத்தில் கார் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆலந்தூர்,

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன் (வயது 27). கட்டிட காண்டிராக்டர். இவருக்கும், ரேவதி என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.

தாமோதரனின் நண்பர் அபினேஷ்(26). இவருக்கும், விஷாலினி(21) என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு உள்ளது. விஷாலினியின் தங்கை கண்மணி(20).

இந்தநிலையில் தாமோதரன், அவருடைய நண்பர் அபினேஷ், விஷாலினி, கண்மணி ஆகிய 4 பேரும் காரில் புதுச்சேரிக்கு சுற்றுலா சென் றனர். நேற்று அதிகாலையில் காரில் சென்னைக்கு திரும்பி வந்தனர்.

மரத்தில் மோதி பலி

காரை தாமோதரன் ஓட்டினார். அவருக்கு அருகில் கண்மணி அமர்ந்து இருந்தார். அபினேஷ், விஷாலினி இருவரும் காரின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தனர்.

பனையூர் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது பலத்த மழை பெய்து கொண்டு இருந்ததால் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது.

இதில் காரை ஓட்டி வந்த புதுமாப்பிள்ளை தாமோதரன், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

3 பேர் படுகாயம்

இந்த விபத்தில் அபினேஷ், விஷாலினி, கண்மணி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். மரத்தில் கார் மோதிய சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி கானத்தூர் போலீசாருக்கும், அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலியான தாமோதரன் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story