கொருக்குப்பேட்டையில் 4 வயது சிறுவனை கடத்தி சித்ரவதை


கொருக்குப்பேட்டையில் 4 வயது சிறுவனை கடத்தி சித்ரவதை
x
தினத்தந்தி 21 Aug 2017 10:15 PM GMT (Updated: 21 Aug 2017 6:49 PM GMT)

கொருக்குப்பேட்டையில் 4 வயது சிறுவனை கடத்தி சித்ரவதை செய்த மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ராயபுரம்,

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 4 வயது சிறுவன், கடந்த சனிக்கிழமையன்று வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டு இருந்தான்.

அப்போது அந்த பகுதிக்கு கஞ்சா போதைக்கு அடிமையான 3 பேர் கொண்ட கும்பல் வந்து, சிறுவனின் வாயை பொத்தி கடத்தி சென்றது. மறைவான இடத்திற்கு சிறுவனை கொண்டு சென்ற அவர்கள், அவனை சித்ரவதை செய்து கஞ்சா புகையை அவனது முகத்தில் ஊதினர். தொடர்ச்சியாக கஞ்சா புகையை சிறுவன் சுவாசித்ததால் அவன் மயக்கம் அடைந்து உயிருக்கு போராடினான்.

சிறுவனுக்கு சிகிச்சை

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கும்பல் சிறுவனை அருகில் இருந்த ஒரு பொது கழிப்பிடத்தில் விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அப்போது கழிப்பிடத்திற்கு வந்த ஒருவர் சிறுவன் மயங்கி கிடப்பதை பார்த்து சத்தம் போட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் கொருக்குப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிலர் தன்னை கடத்தி சென்று கஞ்சா புகையை முகத்தில் ஊதியதாக சிறுவன் தெரிவித்தான். இதனையடுத்து சிறுவனை கடத்தி சித்ரவதை செய்த மர்மகும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story