பழங்குடியினர் சான்றிதழ் வழங்காததை கண்டித்து ஒரு கண்ணில் சுண்ணாம்பு பூசி வந்து நூதன மனு


பழங்குடியினர் சான்றிதழ் வழங்காததை கண்டித்து ஒரு கண்ணில் சுண்ணாம்பு பூசி வந்து நூதன மனு
x
தினத்தந்தி 21 Aug 2017 10:15 PM GMT (Updated: 21 Aug 2017 7:18 PM GMT)

தேனி கலெக்டர் அலுவலகத்தில், சீர்மரபினர் நலச்சங்கத்தினரும், தென்இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினரும் ஒரு கண்ணில் சுண்ணாம்பு பூசி வந்து நூதன மனு அளித்தனர்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த கூட்டத்தில் மனு அளிப்பதற்காக சீர்மரபினர் நலச்சங்கத்தினர் மற்றும் தென்இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் தங்களின் ஒரு கண்ணை சுற்றிலும் சுண்ணாம்பு பூசியபடி வந்தனர். பின்னர், மாவட்ட கலெக்டர் வெங்கடாசலத்தை சந்தித்து அவர்கள் மனு அளித்தனர்.

அந்த மனுவில், ‘தமிழ்நாட்டில் சீர்மரபினர் பட்டியலில் 68 சாதியினர் உள்ளனர். இந்த மக்களுக்கு கடந்த 1979–ம் ஆண்டு வரை சீர்மரபின பழங்குடியினர் என்று சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. 30–7–1979 அன்று அரசாணை 1310–ன் மூலம் அதிகாரிகள், மத்திய அரசு பரிந்துரைத்ததாக பொய்யான காரணத்தை கூறி சீர்மரபினர் சமுதாயம் என்று மாற்றிவிட்டனர். யாரும் கவனிக்காத நிலையில், இந்த மக்கள் பெற்று வந்த இலவச உயர்கல்வி பறிக்கப்பட்டுவிட்டது. மற்ற பழங்குடிமக்களுக்கு மட்டும் சமூகநீதி என்ற பெயரில் புதுப்புது உரிமைகள். ஆனால், அரசியல் சட்டப்படியும், அதற்கு முன்பே 1916–ல் ஒடுக்கப்பட்டவர்கள் பட்டியலில் முதலில் இருந்த இந்த மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர். எவ்வளவு காலத்துக்கு ஒரு கண்ணில் வெண்ணை, ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்ற நிலைமை நீடிக்கும். எனவே, எங்களுக்கு உடனடியாக வெண்ணை வேண்டும். தமிழகத்தில் மட்டும் இந்த நிலைமை என்பது அநீதியானது. எனவே, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, சீர்மரபினர் பழங்குடியினர் என்று சாதி சான்றிதழ் மாற்றிக் கொடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

இதுதொடர்பாக மனு அளிக்க வந்த சீர்மரபினர் நலச்சங்கத்தின் மகளிர் அணி மாநில தலைவி தவமணிதேவி, தேனி மாவட்ட தென்இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் கூறுகையில், ‘இந்த சாதி சான்றிதழ் மாற்றம் மற்றும் 1979–ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி சீர்மரபினர் நலச்சங்கம் மற்றும் தோழமை அமைப்புகள் சார்பில் குமரி முதல் கோட்டை வரை நீதிப் பயணம் கடந்த 17–ந்தேதி மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இந்த மனு அளிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து தேனி மாவட்டம் முழுவதும் மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டு, பிற மாவட்டங்களுக்கு செல்கின்றனர்’ என்றனர்.

காமயகவுண்டன்பட்டி கூத்தனாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘எங்கள் குடியிருப்பு பகுதியில் அரசு மதுக்கடை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மக்களின் எதிர்ப்பால் கடை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. 55 நாட்கள் கழித்து மீண்டும் அதே இடத்தில் கடையை அமைக்க முயற்சி நடக்கிறது. அப்பகுதியில் பள்ளி, கோவில், குடியிருப்புகள் உள்ளன. எனவே அங்கு மதுக்கடை அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தி, அதற்கான உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

தமிழ்நாடு பழங்குடி தமிழர் இயக்கத்தினர் கொடுத்த மனுவில், ‘சின்னமனூர் காந்திநகர் காலனியில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து, முறைகேடாக பட்டாவை பெயர் மாற்றம் செய்கின்றனர். இதற்கு ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

இதுபோன்ற மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Next Story