ஜெயலலிதாவின் மகள் என்று கூறும் பெங்களூரு பெண் தாயின் இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக சென்னை சென்று வந்தார்


ஜெயலலிதாவின் மகள் என்று கூறும் பெங்களூரு பெண் தாயின் இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக சென்னை சென்று வந்தார்
x
தினத்தந்தி 31 Aug 2017 9:00 PM GMT (Updated: 31 Aug 2017 6:41 PM GMT)

ஜெயலலிதாவின் மகள் எனக்கூறி பிரதமருக்கு கடிதம் எழுதிய பெங்களூரு பெண், தாயின் இறப்பு சான்றிதழை வாங்க சென்னைக்கு சென்று வந்தது தெரிய வந்துள்ளது.

பெங்களூரு,

ஜெயலலிதாவின் மகள் எனக்கூறி பிரதமருக்கு கடிதம் எழுதிய பெங்களூரு பெண், தாயின் இறப்பு சான்றிதழை வாங்க சென்னைக்கு சென்று வந்தது தெரிய வந்துள்ளது.

ஜெயலலிதாவின் மகள்

மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறும் பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருதா என்பவர் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருக்கும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதுபோல் ஜனாதிபதி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோருக்கும் மஞ்சுளா கடிதம் எழுதி உள்ளார். அதில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தான் ஜெயலலிதா–சோபன்பாபுவுக்கு பிறந்தவள் என்பதை நிரூபிக்க தனக்கு டி.என்.ஏ. பரிசோதனை(மரபணு பரிசோதனை) நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

இறப்பு சான்றிதழ் வாங்க...

இந்த நிலையில், மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழை வாங்க பெங்களூருவில் இருந்து அந்த பெண் கடந்த மாதம்(ஆகஸ்டு) சென்னை சென்று வந்ததும் தெரியவந்து உள்ளது. அதாவது கடந்த மாதம்(ஆகஸ்டு) 21–ந் தேதி சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகைக்கு சென்று, அங்குள்ள அரசு அதிகாரிகளிடம் தான் மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று மஞ்சுளா கூறியுள்ளார். மேலும் தனது தாய் ஜெயலலிதா, தந்தை சோபன்பாபுவின் இறப்பு சான்றிதழ்களை தனக்கு வழங்கும்படி அதிகாரிகளிடம் மஞ்சுளா கேட்டுள்ளார்.

அப்போது அவர்களது இறப்பு சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி மஞ்சுளாவிடம் அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. அதன்படி, ஜெயலலிதா, சோபன்பாபு ஆகியோரின் இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் மஞ்சுளா பதிவிறக்கம் செய்து வைத்திருப்பதாகவும், அதே நேரத்தில் முன்பு ஜெயலலிதாவை சென்னையில் வைத்து சந்தித்தபோது, அவர் வாங்கி கொடுத்த 2 தங்க நகைகளுக்கான ரசீதுகளையும் மஞ்சுளா பாதுகாத்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story