பேரீச்சம்பழத்துக்கு விற்ற பெட்டியில் இருந்த 75 பவுன் நகை-பணம் மீட்பு


பேரீச்சம்பழத்துக்கு விற்ற பெட்டியில் இருந்த 75 பவுன் நகை-பணம் மீட்பு
x
தினத்தந்தி 13 Sep 2017 9:30 AM GMT (Updated: 13 Sep 2017 6:32 AM GMT)

பேரீச்சம்பழத்துக்கு விற்ற இரும்பு பெட்டியில் இருந்து 75 பவுன் நகைகள், ரூ.40 ஆயிரம் மீட்கப்பட்ட ருசிகர சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

திருவனந்தபுரம்,

இதுபற்றிய விவரம் வருமாறு:-

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கண்ணபுரத்தில் வசித்து வந்த ஒரு குடும்பத்தினர், பரியாரம் பகுதியில் புதிதாக வீடு கட்டினர். இதையடுத்து புதிய வீட்டில் குடியேறுவதற்காக, ஏற்கனவே வசித்து வந்த வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துச் சென்றனர்.

அப்போது, பழைய இரும்பு பெட்டி மற்றும் சில பிளாஸ்டிக் பொருட்களை பேரீச்சம் பழத்திற்காக ஒரு வியாபாரியிடம் விற்றனர். இந்த நிலையில் அவர்களது நகைகள் காணாமல் போனது. அதுபற்றி அந்த குடும்பத்தினர், போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்திய போது, பழைய இரும்பு பெட்டியுடன் நகைகளும் பேரீச்சம்பழ வியாபாரியிடம் சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. எனவே அந்த வியாபாரியை பிடித்து போலீசார் விசாரித்த போது, தங்க நகைகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் கூறி விட்டார்.

இருந்தாலும் வியாபாரியின் வீட்டில் போலீசார் சோதனையிட்டனர். அவர் வாங்கி வந்த பழைய பொருட்களை எல்லாம் ஒரு குடோனில் குவித்து வைத்திருந்தார். அந்த குடோனில் போலீசார் நீண்ட நேரம் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஒரு பழைய இரும்பு பெட்டியை திறந்து பார்த்தனர். அதில் தங்க நகைகள், ரொக்கப்பணம் இருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். அந்த பெட்டியில் இருந்த நகைகளை எடை போட்ட போது 75 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் இருந்தது. அவற்றை போலீசார் மீட்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைத்தனர். பேரீச்சம்பழத்திற்கு விற்கப்பட்ட இரும்பு பெட்டியில் 75 பவுன் தங்க நகைகள், ரூ.40 ஆயிரம் இருந்தது பற்றிய ருசிகர தகவல் மற்றவர்களையும் ஆச்சரியப்படுத்தாமல் இல்லை. மேலும் நகை, பணம் கிடைத்ததில் அந்த குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story