தீபாவளி புத்தாடை வாங்குவதில் காதலியுடன் வாக்குவாதம்: மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை


தீபாவளி புத்தாடை வாங்குவதில் காதலியுடன் வாக்குவாதம்: மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 18 Oct 2017 12:00 AM GMT (Updated: 17 Oct 2017 7:21 PM GMT)

தீபாவளி பண்டிகைக்காக புத்தாடைகள் வாங்க வந்த வாலிபர் காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபம் அடைந்து வணிக வளாகத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

கோயம்பேடு,

வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் திருஞானம். இவரது மகன் யுவராஜ் (வயது 27). பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.

அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதலியுடன் நேற்று சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள விஜயா வணிக வளாகத்தில் உள்ள கடையில் தீபாவளி பண்டிகைக்காக புத்தாடைகள் வாங்க வந்தார்.

அப்போது ஆடைகள் வாங்குவது குறித்து யுவராஜுக்கும், அவரது காதலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற யுவராஜ் வணிக வளாகத்தின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அந்த இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் வணிக வளாகத்திற்கு பொருட்கள் வாங்க வந்தவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவல் கிடைத்து வடபழனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசார் யுவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து காதலியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story