பக்கத்து வீட்டு பெண்ணுடன் தகராறு ஆடை கிழிந்ததால் அவமானம் தாங்காமல் பெண் தற்கொலை


பக்கத்து வீட்டு பெண்ணுடன் தகராறு ஆடை கிழிந்ததால் அவமானம் தாங்காமல் பெண் தற்கொலை
x
தினத்தந்தி 23 Oct 2017 12:00 AM GMT (Updated: 22 Oct 2017 7:37 PM GMT)

பக்கத்து வீட்டு பெண்ணுடன் ஏற்பட்ட தகராறில் தனது ஆடை கிழிந்ததால் அவமானம் தாங்காமல் பெண், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராயபுரம்,

சென்னை புதுவண்ணாரப்பேட்டை எம்.பி.டி. குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் லோகேஸ்வரன். இவருடைய மனைவி திவ்யா(வயது 39). இவர்களுக்கு 5 வயதில் ரக்ஷிதா என்ற பெண் குழந்தை உள்ளது.

திவ்யா, பக்கத்து வீட்டில் வசிக்கும் நாகம்மாள் என்பவரிடம் ரே‌ஷன் கார்டு வாங்கித் தரும்படி ரூ.6 ஆயிரம் கொடுத்தார். நீண்ட நாட்களாகியும் ரே‌ஷன் கார்டு வாங்கித்தராததால் பணத்தை திரும்ப தரும்படி கேட்டார். நாகம்மாளும் ரூ.3 ஆயிரத்தை திரும்ப கொடுத்தார். பாக்கி ரூ.3 ஆயிரத்தை தராமல் காலம் கடத்தி வந்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக நேற்று முன்தினம் மாலை திவ்யாவுக்கும், நாகம்மாளுக்கும் தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது நாகம்மாள், திவ்யாவின் ஆடையை கிழித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவமானம் தாங்க முடியாமல் திவ்யா, தனது வீட்டுக்குள் சென்று தூக்குப்போட்டுக்கொண்டார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி திவ்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story