திருப்பூரில், மதபாடசாலையில் சிறுமிகளுக்கு சூடு வைத்த நிர்வாகிகள் 2 பேர் கைது


திருப்பூரில், மதபாடசாலையில் சிறுமிகளுக்கு சூடு வைத்த நிர்வாகிகள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 Oct 2017 11:00 PM GMT (Updated: 25 Oct 2017 7:19 PM GMT)

திருப்பூரில் மதபாட சாலையில் தங்கி படித்து வந்த 4 சிறுமிகளுக்கு சூடு வைத்து பிரம்பால் அடித்ததாக 2 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான ஆசிரியரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருப்பூர்,

திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் சாதிக் பாஷா(வயது 44). இவர் தள்ளுவண்டியில் பிரியாணி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் நாகராஜனை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

அந்த மனுவில், எனக்கு 13 வயதில் சுமையா என்ற மகள் உள்ளாள். அவளை திருப்பூரில் உள்ள மதபாடசாலை ஒன்றில் சேர்த்தேன். அந்த மதபாடசாலை ஆசிரியர் எனது மகள் கையில் சூடுவைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் கமி‌ஷனர் இதுதொடர்பாக விசாரணை நடத்த திருப்பூர் ஊரக போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட மதபாடசாலை நிர்வாகிகளிடம் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் மதபாடசாலையில் தங்கி இருந்த 4 சிறுமிகளுக்கு சூடு வைத்ததாகவும், அவர்களை பிரம்பால் அடித்ததாகவும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மதபாடசாலை நிர்வாகிகள் நவ்சாத் (52), ஆயிஷா (42) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். ஆசிரியை நஷ்ரீன் பாத்திமா தலைமறைவாகி விட்டார். அவரை திருப்பூர் தெற்கு போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story