உயிரிழந்த மகனின் ஆசையை நிறைவேற்ற ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு எழுதி வைத்துவிட்டு இறந்த விவசாயி


உயிரிழந்த மகனின் ஆசையை நிறைவேற்ற ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு எழுதி வைத்துவிட்டு இறந்த விவசாயி
x
தினத்தந்தி 18 Nov 2017 11:00 PM GMT (Updated: 18 Nov 2017 8:33 PM GMT)

சென்னிமலையில், உயிரிழந்த மகனின் ஆசையை நிறைவேற்ற ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு உயில் எழுதி வைத்துவிட்டு விவசாயி இறந்துவிட்டார்.

சென்னிமலை,

ஈரோடு மாவட்டம் சென்னிமலை காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சின்னநாச்சிமுத்து (வயது 75). விவசாயி. இவர் கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். இவருக்கு ஈஸ்வரி (52) என்ற மகள் உள்ளார். மேலும் நடராஜன் என்ற மகனும் இருந்தார். இவர் உடல் நலம் சரியில்லாமல் 10 வருடங்கள் படுத்த படுக்கையாக கிடந்து தனது 47-வது வயதில் கடந்த 2014-ம் ஆண்டு இறந்து விட்டார்.

நடராஜன் சாகும் முன்பு தந்தை நாச்சிமுத்துவிடம், ‘நன்றாக படித்து வேலைக்கு போக வேண்டும் என்ற என் கனவு நிறைவேறவில்லை. அதனால் எனக்கு வரும் சொத்தின் பங்கை நான் இறந்த பிறகு நம்ம ஊர் (அம்மாபாளையம்) அரசு பள்ளிக்கு எழுதி கொடுத்து ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் என்னுடைய ஆசையை நிறைவேற்றுங்கள்’ என கூறி இருந்தார்.

உயிரிழந்த மகனின் ஆசையை நிறைவேற்ற நாச்சிமுத்து, அம்மாபாளையம் அரசு பள்ளிக்கு தனது 4 ஏக்கர் 60 சென்ட் நிலத்தை உயில் எழுதி மகள் கையில் கொடுத்தார். இந்தநிலையில் கடந்த மாதம் அவர் இறந்து விட்டார். அதைத்தொடர்ந்து தந்தை எழுதி கொடுத்த உயிலை அவரது மகள் ஈஸ்வரி கல்வி அதிகாரியிடம் ஒப்படைத்து தனது தம்பி மற்றும் தந்தையின் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

சுமார் ரூ.1 கோடிக்கும் மேல் மதிப்புள்ள 4 ஏக்கர் 60 சென்ட் நிலத்தை அரசிடம் ஒப்படைத்த ஈஸ்வரியை சந்தித்தோம்.

அப்போது ஈஸ்வரி தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-

எனது தந்தை சின்னநாச்சிமுத்து ஒரு நெசவு தொழிலாளி. மிகவும் சிரமப்பட்டு எங்களை படிக்க வைத்தார். எனது தம்பி நடராஜன் ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.எம் படித்தார். மேல்படிப்பு படிக்க அதிக ஆர்வம் இருந்தாலும் மேற்கொண்டு தம்பியால் படிக்க முடியவில்லை.

தபால் மூலம் எம்.பி.ஏ மற்றும் எம்.பில் பட்டம் பெற்றார். மேலும் பி.எச்.டி ஆராய்ச்சி படிப்பு முடித்துவிட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதே தம்பியின் கனவாக இருந்தது. திருக்குறள், தேவாரம், திருவாசகம் என அனைத்தையும் தம்பி மனப்பாடமாக ஒப்புவிப்பார். இந்த நிலையில், தம்பிக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் 10 வருடங்கள் வீட்டிலேயே படுத்த படுக்கையாக கிடந்தார். அப்போதும் மேல்படிப்பு படிக்க முடியவில்லையே! என தம்பி புலம்பி கொண்டிருப்பார்.

திடீரென நடராஜனின் உடல்நிலை மிகவும் மோசமானது. அப்போது என் தந்தையிடம், என்னுடைய மேற்படிப்பும், வேலை கனவும் நிறைவேறாமல் போய்விட்டது. என் போன்ற நிலைமை யாருக்கும் வரக்கூடாது. அதனால் என் பங்குக்கு உள்ள சொத்தை ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் நம்ம ஊர் (அம்மாபாளையம்) அரசு பள்ளிக்கு எழுதி வைத்துவிடுங்கள் எனக்கூறிவிட்டு கடந்த 22-9-2014 அன்று இறந்து விட்டார். அன்று முதல் எனது தந்தை நாச்சிமுத்துவும், தாய் மீனாட்சி அம்மாளும் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில், தாய் மீனாட்சியும் கடந்த 9-7-2016 அன்று இறந்து விட்டார். அதன்பிறகு என் தந்தையும் நோய்வாய்பட்டார். அப்போது ஒருநாள் என்னை அழைத்து, ‘உன் தம்பியின் கடைசி ஆசைப்படி அரசு பள்ளிக்கு சொத்தை உயில் எழுதி வைக்கட்டுமா?’ என கேட்டார். நான் மறுப்பு ஏதும் சொல்லாமல் சரி என்று சொன்னேன். அதைத்தொடர்ந்து, அவர் இறந்த பிறகு 4 ஏக்கர் 60 சென்ட் நிலம் அம்மாபாளையம் அரசு பள்ளிக்கே சொந்தம் என கடந்த மே மாதம் ஒரு உயில் எழுதி என்னிடம் கொடுத்தார். இந்த நிலையில், கடந்த மாதம் 12-ந் தேதியன்று எனது தந்தை இறந்து விட்டார். அதன்பிறகுதான் 4 ஏக்கர் 60 சென்ட் நிலத்தை அரசு பள்ளிக்கு எனது தந்தை உயில் எழுதி வைத்த விஷயத்தை எனது கணவர், மகள்-மருமகனிடம் சொன்னேன். அவர்கள் யாரும் வருத்தப்படாமல் மகிழ்ச்சி அடைந்தனர். பிறகு உறவினர்களின் உதவியுடன் ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் எனது தந்தை எழுதி கொடுத்த உயில் சாசனத்தை வழங்கினேன்,”என்றார்.

ஈஸ்வரி அறச்சலூர் அருகே ஓடாநிலையில் கணவர் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இவருடைய கணவர் அர்ச்சுனன். விவசாயி. இவர்களுடைய ஒரே மகள் வனிதாவுக்கு திருமணம் ஆகி அவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

ஈஸ்வரி மாவட்ட கல்வி அதிகாரியிடம் ஒப்படைத்த நிலம் சென்னிமலை அருகே அம்மாபாளையம் ஊருக்கு அருகில் உள்ளது.

சிறிய வரப்பு நிலத்துக்காக நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாய் வழக்கு தொடுத்து அலையாய் அலையும் இந்த காலத்தில் மகனின் ஆசையை நிறைவேற்ற தன்னுடைய நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாய் அளித்த நாச்சிமுத்துவையும், அதை நிறைவேற்றிய ஈஸ்வரியையும் அந்த பகுதி மக்கள் பாராட்டினார்கள். 

Next Story