கர்ப்பிணி பெண் படுகொலை; சமையல் கியாசை திறந்துவிட்டு உடல் எரிப்பு கணவன் கைது


கர்ப்பிணி பெண் படுகொலை; சமையல் கியாசை திறந்துவிட்டு உடல் எரிப்பு கணவன் கைது
x
தினத்தந்தி 18 Nov 2017 11:15 PM GMT (Updated: 18 Nov 2017 9:21 PM GMT)

புதுக்கடை அருகே கர்ப்பிணி பெண் படுகொலை செய்யப்பட்டார். சமையல் கியாசை திறந்து விட்டு அவரது உடல் எரிக்கப்பட்டது. இது தொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுக்கடை,

குமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள வேங்கோடு, தோட்டத்துவிளையை சேர்ந்தவர் சீமோன் (வயது 33). கொத்தனார். இவருக்கும் மங்காடு, ஆலங்கோடு பகுதியை சேர்ந்த ஷாலினி (23) என்பவருக்கும் இடையே கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. ஷாலினி தற்போது, கர்ப்பிணியாக இருந்தார்.

சீமோனுக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார். இதனை ஷாலினி கண்டித்தார். இதனால், அவர்கள் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும், சீமோன் தனது மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு கணவன்–மனைவி இருவரும் தூங்கி கொண்டிருந்தனர்.

 அப்போது திடீரென சீமோன் கண்விழித்தார். அவர் சமையல் அறைக்கு சென்று கிரைண்டர் கல்லை தூக்கி வந்து ஷாலினியின் தலையில் போட்டார். இதில் மூளை சிதறி ஷாலினி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதையடுத்து ஷாலினியை கொலை செய்தது வெளியே தெரிந்தால், தன்னை போலீசார் பிடித்து விடுவார்கள் என நினைத்து சீமோன் அச்சமடைந்தார். இதனால், ஷாலினி தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாட அவர் திட்டமிட்டார். இதற்காக அவரது பிணத்தை சமையல் அறைக்கு இழுத்து சென்று, சமையல் கியாசை திறந்து தீ வைத்தார். அறை முழுவதும் தீ பரவியதும் அங்கிருந்து தப்பி அருகில் இருந்த அறையில் சீமோன் பதுங்கி கொண்டார். ஆனால் ஷாலினியின் உடல் தீப்பிடித்து எரிந்தது. இதில் அவரது உடல் பாதி அளவு எரிந்து கருகியது.

இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கர்ப்பிணி பெண் தீயில் எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் தீயை அணைத்தனர்.

 அப்போது சிலிண்டரில் சிறிதளவு கியாஸ் இருந்ததால், அது வெடிக்கவில்லை. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து புதுக்கடை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது, வீட்டின் ஒரு அறையில் சீமோன் பதுங்கி இருந்தார். போலீசாரை கண்டதும் சீமோன் தூக்குப்போட்டு தற்கொலை செய்வதற்காக கயிறு கட்டினார். இதை பார்த்த போலீசார் வேகமாக செயல்பட்டு அவரை மீட்டனர். பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, தானும், மனைவியும் தற்கொலை செய்ய முயன்றதாகவும், இதில் ஷாலினி இறந்து விட்டார் என்றும், தான் பிழைத்து கொண்டதாகவும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.

இதுகுறித்து ஷாலினியின் உறவினர்கள் கூறும்போது, “சீமோன் தற்போது புதிதாக வீடு கட்டி வந்தார். அந்த வீட்டை கட்டி முடிப்பதற்காக ஷாலினியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தினார். இதில் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்“ என்றனர்.

இதையடுத்து ஷாலினியின் பிணத்தை போலீசார் கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தீவிர விசாரணைக்கு பின்னர் ஷாலினி அவருடைய கணவரால் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவசங்கரன் வழக்குப்பதிவு செய்து வரதட்சணை கொடுமையால் ஷாலினி கொலை செய்யப்பட்டாரா? அல்லது கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார். மேலும், குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரனும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

திருமணமான 6 மாதத்தில் ஷாலினி படுகொலை செய்யப்பட்டுள்ளதால், இதுகுறித்து பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

மனைவியை கணவனே, படுகொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story