ஒரு மாதத்துக்கு முன்பு மாயம்: கிணற்றுக்குள் பிணமாக கிடந்த பிளஸ்–2 மாணவர் போலீஸ் விசாரணை


ஒரு மாதத்துக்கு முன்பு மாயம்: கிணற்றுக்குள் பிணமாக கிடந்த பிளஸ்–2 மாணவர் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 21 Nov 2017 10:45 PM GMT (Updated: 21 Nov 2017 7:56 PM GMT)

தேனி அருகே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மாயமான பிளஸ்–2 மாணவர், கிணற்றுக்குள் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி,

தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டி தலைசுருளி தெருவை சேர்ந்தவர் சேதுகோபால் (வயது 56). இவர், ஒரு கடையில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். அவருடைய மகன் அஸ்வின்குமார் (17). இவர், முத்துத்தேவன்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.

கடந்த மாதம் இவர் பள்ளிக்கு 2 நாட்கள் செல்லவில்லை. இதனால், பள்ளிக்கு செல்லுமாறு சேதுகோபால் கூறியுள்ளார். இதனால், அஸ்வின்குமார் கடந்த மாதம் 20–ந்தேதி தன்னை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள் என்று கூறி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். மீண்டும் வீட்டுக்கு திரும்பிவரவில்லை.

இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் சேதுகோபால் புகார் செய்தார். அதன்பேரில் மாணவன் மாயமானது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில், பழனிசெட்டிபட்டி–பூதிப்புரம் சாலையில் ஒரு தியேட்டர் அருகில் உள்ள தனியார் தோட்டத்து கிணற்றில் இருந்து நேற்று காலை துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது கிணற்றுக்குள் அழுகிய நிலையில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. தகவல் அறிந்ததும் வீரபாண்டி கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தார்.

பின்னர் அவர், பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். தீயணைப்பு படை வீரர்களும் அங்கு வந்து உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். முகம், தலை, கை, கால்கள் சேதம் அடைந்து அடையாளம் தெரியாத வகையில் உடல் முழுவதும் அழுகிய நிலையில் இருந்தது.

இந்த தகவல் அக்கம் பக்கத்தில் பரவியது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கு கூடினர். இதற்கிடையே தகவல் அறிந்த சேதுகோபால் அங்கு வந்தார். பிணத்தில் இருந்த ஆடைகளை வைத்து, அது தனது மகன் அஸ்வின்குமார் தான் என்று அவர் அடையாளம் காட்டினார். பின்னர் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மாயமான மாணவர், அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அஸ்வின்குமார் குளிக்க சென்று தவறி விழுந்தாரா? அல்லது படிக்க விருப்பம் இன்றி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்பது குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story