புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நர்சிங் மாணவி மயங்கி விழுந்து சாவு


புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நர்சிங் மாணவி மயங்கி விழுந்து சாவு
x
தினத்தந்தி 13 Dec 2017 11:45 PM GMT (Updated: 13 Dec 2017 8:18 PM GMT)

புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மயங்கிவிழுந்து நர்சிங் கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார். திருமணமான 2 மாதத்திலேயே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

செங்குன்றம்,

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த பஞ்செட்டி நத்தம் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்மொழி. இவருடைய மனைவி ரஜினீஸ்வரி (வயது 20). இவர் பொன்னேரியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் 2–ம் ஆண்டு நர்சிங் படித்துவந்தார்.

புழல் ஏரிக்கரையில் உள்ள சென்னைக்கு குடிநீர் வழங்கும் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அந்த கல்லூரி மாணவிகள் 36 பேர் பாடம் சம்பந்தமாக ஆய்வு செய்வதற்காக நேற்று மாலை வந்தனர். அப்போது அங்கிருந்த தொட்டியின் மீது ஏறும்போது ரஜினீஸ்வரிக்கு மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார்.

இதில் அவரது தலையில் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை புழல் ரெட்டேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

ரஜினீஸ்வரிக்கு 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story