சேலத்தில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது


சேலத்தில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 15 Dec 2017 11:44 PM GMT (Updated: 15 Dec 2017 11:44 PM GMT)

சேலத்தில் சொத்துத்தகராறு காரணமாக கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது.

சேலம்,

சேலம் குகை நரசிங்கபுரம் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 55), துணி வியாபாரி. இவருடைய மனைவி சந்திரகலா (50). இவர்களுக்கு அருண்பிரகாஷ், ஜெய்கார்த்திக் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் அருண்பிரகாஷ் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஜெய்கார்த்திக் தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணி அளவில் நடராஜன் தன்னுடைய மகன் அருண்பிரகாசுக்கு ஒரு கூரியர் அனுப்பி உள்ளார். அதில் இருந்த கடிதத்தில் ‘உன் சித்தப்பாவின் தொந்தரவு அதிகமாக இருப்பதால், அப்பா, அம்மா இருவரும் தற்கொலை செய்யப் போவதாக எழுதி உள்ளார். மேலும் அந்த கவருக்குள் வீட்டு சாவியும் இருந்தது. இந்த கடிதத்தை நேற்று மாலைதான் அருண்பிரகாஷ் பிரித்து படித்துள்ளார்.

இதில் அதிர்ச்சி அடைந்த அருண்பிரகாஷ் உடனடியாக சேலத்தில் உள்ள தனது தாயின் உறவினருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, கடிதத்தில் இருந்த விவரங்களை கூறி உள்ளார். இதையடுத்து அவர் அங்கிருந்து நடராஜன் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, குமரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பூட்டு திறக்கப்பட்டது. போலீசார் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கட்டிலில் நடராஜன், சந்திரகலா ஆகியோர் பிணங்களாக கிடந்தனர். மேலும் வீட்டுக்குள் விஷ பாட்டில் கிடந்ததால், இவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.


இதற்கிடையே, வீட்டில் இருந்த ஒரு மேசையின் மீது நடராஜன் தற்கொலை செய்வதற்கு முன் எழுதி வைத்திருந்த 4 பக்கங்கள் கொண்ட உருக்கமான கடிதமும், சி.டி. ஒன்று, 2 பென்டிரைவ் ஆகியவை இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து நடராஜன், சந்திரகலா ஆகியோரது உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வீட்டின் முன்பு திரண்டனர்.போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

நடராஜன் வசித்து வந்த வீட்டின் முதல் மாடியில் அவருடைய தம்பி விஜயராகவன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீட்டை நடராஜனின் 2 மகன்கள் பெயரில் அவருடைய தந்தை சோமசுந்தரம் எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டை காலி செய்யுமாறு நடராஜன் தன்னுடைய தம்பியிடம் கூறி உள்ளார்.

இதற்கு அவர், ரூ.1 கோடி தந்தால் வீட்டை காலி செய்வேன், இல்லையெனில் உங்களை கொன்று விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் விஜயராகவனின் குடும்பத்தினர் சந்திரகலாவை அடிக்கடி தகாத வார்த்தையால் திட்டி மிரட்டி உள்ளனர். இதனால் நடராஜன், சந்திரகலா இருவரும் கடும் மன உளைச்சலில் அங்கு வசித்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த விவரங்கள் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதனிடையே நடராஜன் எழுதிய உருக்கமான கடிதம் குறித்து போலீசார் தரப்பில் கூறும்போது, விஜயராகவன் ஆரம்பத்தில் இருந்து இதுவரை நடராஜனுக்கு கொடுத்த தொல்லைகள் அனைத்தையும் விரிவாக எழுதியிருந்ததாகவும், தங்களுடைய தற்கொலைக்கு விஜயராகவன் குடும்பத்தினர்தான் காரணம் என்று அதில் எழுதப்பட்டு இருந்தது எனவும் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயராகவனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துத் தகராறில் கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story