வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்புகொள்ள ஒரு படிப்பு


வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்புகொள்ள ஒரு படிப்பு
x
தினத்தந்தி 16 Dec 2017 9:56 AM GMT (Updated: 16 Dec 2017 9:56 AM GMT)

எதிர்காலத்தில் வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்புகொள்ளவும், அவர்களுடன் பேசுவதற்காகவும் புதிய படிப்பை துருக்கியில் இருக்கும் ஒரு பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

‘ஏலியன்கள்’ எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய ஆய்வுகளும், அவர்களைத் தொடர்புகொள்ளும் முயற்சிகளும் தொடர்ந்து நடந்தபடி இருக்கின்றன.

துருக்கியில் இருக்கும் அக்டேனிஸ் பல்கலைக்கழகம், யுபாலாஜி மற்றும் எக்ஸ்பாலிடிக்ஸ் என இதற்கு தலைப்பு வைத்துள்ளது. இந்தப் படிப்பு, வேற்றுக்கிரக வாசிகளுடன் பேசுவதற்கான படிப்பு என்று கூறப்படுகிறது.

இதன்மூலம் எதிர்காலத்தில் வேற்றுக்கிரகவாசிகளைத் தொடர்புகொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. இந்தப் படிப்பில், உலகில் இருக்கும் முக்கியமான மொழிகள் குறித்த தகவல்கள் பாடமாக நடத்தப்படும். மொழி தெரியாத, மொழி இல்லாத மக்களிடம் பேசுவது எப்படி என்றும் கற்றுத் தரப்படுமாம்.

மேலும் வேற்றுக்கிரகவாசிகளின் மொழியைப் புரிந்துகொள்வதற்கும் இது உதவும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் இந்தப் படிப்புக்கு நிறைய எதிர்பார்ப்பு உருவாகும் என்றும் கூறப்படுகிறது.

தற்போதே இந்தப் படிப்பில் சேர்வதற்கு நிறைய மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த படிப்பு குறித்த தகவல்களை அதிகம் பேர் தேடியுள்ளனர் என்றும் செய்தி வெளியாகியிருக்கிறது. 

Next Story