தாம்பரத்தில் 250 கிலோ குட்கா பறிமுதல் 3 பேர் கைது


தாம்பரத்தில் 250 கிலோ குட்கா பறிமுதல் 3 பேர் கைது
x
தினத்தந்தி 12 Jan 2018 11:00 PM GMT (Updated: 12 Jan 2018 8:33 PM GMT)

புகையிலை பொருட்களை கடத்திச்சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். லோடு ஆட்டோ பழுதானதால் மோட்டார் சைக்கிளில் எடுத்துச்சென்ற போது போலீசாரிடம் சிக்கினர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் ஜோதி நகர் பகுதியில் நேற்று காலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் பெரிய அட்டைபெட்டிகளுடன் சென்ற 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் வைத்து இருந்த அட்டைபெட்டிகளை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்திச்சென்றது தெரிந்தது.

மேலும் விசாரணையில் அவர்கள், லோடு ஆட்டோவில் குட்காவை கடத்தி வந்ததாகவும், வரும் வழியில் ஆட்டோ பழுதானதால் அதில் இருந்த புகையிலை, குட்கா பெட்டிகளை மோட்டார்சைக்கிள் மூலம் கடைகளுக்கு வினியோகம் செய்ய எடுத்துச் சென்றதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து மோட்டார் சைக்கிள் மற்றும் லோடு ஆட்டோவுடன் சுமார் 250 கிலோ குட்கா, புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக குன்றத்தூரைச் சேர்ந்த மகேந்திரன் (வயது 30), முடிச்சூரைச் சேர்ந்த கலீல் (41), தாம்பரத்தைச் சேர்ந்த ரிஸ்வான் (32) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம், தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கிடைத்தது எப்படி?, இவற்றை எங்கு வினியோகம் செய்ய எடுத்துச் சென்றனர்? என தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story